தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மகான் ஜெயந்த்

மகான் ஜெயந்த்

மகான் ஜெயந்த்


ADDED : பிப் 23, 2016 11:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2016 11:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அப்பா நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? நன்றாக நடக்கும் வியாபாரத்தை ஏன் நிறுத்துகிறீர்கள். இந்த உலகமே பொருள் என்னும் அச்சாணியில் தானே சுற்றுகிறது. இது நீங்கள் அறியாததா என்ன! எங்களையாவது வியாபாரம் செய்ய விடுங்கள்'' என்று தந்தையிடம் அவரது ஆறு மகன்களும் கெஞ்சிக் கேட்டனர்.

தந்தை ஜெயந்த் அவர்களிடம், 'பிள்ளைகளே! நீங்கள் இந்த ஊரில் நல்ல பெயர் வாங்கவில்லை. நம்மை விட வளர்ந்தவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறீர்கள். நான் விஷ்ணுவின் பக்தன் என்பதை இந்த ஊர் அறியும். நீங்களோ கடவுளுக்கு பயப்படாமல் இருக்கிற பொருளை எல்லாம் தவறான வழியில் செலவழிக்கிறீர்கள். உங்களிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை. நான் இன்னும் சம்பாதித்தால் பணம் உங்களை அடிமைப்படுத்தி விடும். நம்மிடம் இப்போது இருப்பதே காலம் முழுமைக்கும் போதும். சம்பாதித்த பணத்தில் பாதியை தர்மத்திற்கு ஒதுக்கி விடுவோம். மற்றதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்,'' என்றார்.

மகன்கள் ஆறுபேருக்கும் கோபம் எழுந்தது. அவர்கள் தந்தையைத் திட்டி தீர்த்தனர்.

இவர்களில் மூத்தவன் தன் தம்பிகளிடம், 'அடேய்! இவரிடம் பணம் இருந்தால் நமக்கு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார். தானம், தர்மம், கோவில், குளம் என்று பணம் எல்லாம் பாழாகி விடும். நாம் அரசனிடம் செல்வோம். இவரைப் பற்றிப் புகார் செய்து செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்வோம்'' என்றான்.

அனைவரும் அரசவைக்குச் சென்றனர்.

மூத்தவன் அரசனிடம், 'மன்னா! எங்கள் தந்தையார் சொத்துக்களை வைத்துக் கொண்டு தர மறுக்கிறார். சொந்தமாக செய்த வியாபாரத்தையும் நிறுத்தி விட்டார். அதில் சேர்த்த செல்வத்தையும் தரவில்லை. நாங்கள் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்றால் முதல் போடுவதற்கு பணம் தர மறுக்கிறார். நாங்கள் எப்படி வாழ முடியும்? எங்களுக்குச் சொத்தை வாங்கித் தாருங்கள்,'' என்றான்.

அரசன் ஜெயந்தை அழைத்து வர உத்தர விட்டான்.

ஜெயந்த் கம்பீர தோற்றத்துடன் அரசவைக்கு வந்தார். நெற்றியில் நாமம் பளிச்சென மின்னியது. பண்புடன் அரசருக்கு வணக்கம் தெரிவித்தார். அரசன் அவரிடம், 'நீர் உமது மகன்களுக்கு செல்வத்தை கொடுக்காமல் உம்மிடம் வைத்திருக்கிறீராமே! அதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்றான் கடுமையாக.

'மன்னா! பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். இறக்கும் போது என்ன கொண்டு செல்லப் போகிறோம். நாம் செய்த செயல்களே நம்முடன் வரப் போகின்றன. இறைவன் கொடுத்த செல்வத்தில் சிறிதளவு தர்மம் செய்வதில் என்ன தவறு? இது புண்ணியத்தை நமக்கு கொடுக்கும்,'' என்று பதிலளித்தார் ஜெயந்த்.

அரசன் மேலும் மேலும் கேள்வி கேட்கத் தொடங்கினான். ஜெயந்த் அதற்கு தர்க்க ரீதியாக பதில் தரத் தொடங்கினார்.

அதைப் புரிந்து கொள்ள இயலாத மன்னன் அவர் மனநிலை சரி இல்லாதவர் என்ற முடிவுக்கு வந்தான். அவரை ஊருக்குள் நடமாட விட்டால் ஏதேனும் அபாயம் உண்டாகும் என்று எண்ணி சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.

சிறிது நேரத்தில் மன்னனுக்கு ஒரு யோசனை தோன்றியது. மனநிலை சரியில்லாதவரை சிறையில் அடைப்பதை விட கொன்று விடுவது மேல் என்ற முடிவுக்கு வந்தான்.

'காவலர்களே! இவரை நீங்கள் நாளை ஒரு சாக்கில் கட்டி குளத்தில் போடுங்கள்'' என்றான்.

காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்ட ஜெயந்த் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர், 'பெருமாளே! நான் உன் பக்தன். நீ எப்படிப்பட்ட சோதனையை எனக்கு அளித்திருக்கிறாய். இதை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தானம் கொடுப்பது பாவம் என்றால் இந்த தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். நான் இதுவரை யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. அந்த திருப்தியுடன் உன் திருவடிகளைச் சரணடைவதில் பெருமை கொள்கிறேன்,'' என்று சொல்லி இரவு முழுவதும் கைகளால் தாளமிட்டபடி பஜனை பாடினார்.

மறுநாள் காவலர்கள் அவரைச் சாக்கில் கட்டி குளத்திற்கு எடுத்து வந்தனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் குளக்கரையில் ஒன்று கூடினர்.

'ஏழைகளுக்கு உதவிய இவருக்கு இப்படி ஒரு தண்டனையா? இந்த மன்னனுக்கு புத்தியில்லாமல் போய்விட்டதா? அதனால் தான் இப்படி ஒரு தண்டனையை விதித்திருக்கிறான்?'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இருந்தாலும் மன்னனை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கு வரும்?

சாக்கிற்குள் இருந்த ஜெயந்த், 'இறைவா! எனக்கு இனி பிறவி வேண்டாம். ஒருவேளை பிறக்க வைப்பதே சித்தமானால் உன்னை மறவாதிருக்கும் இதயத்தைக் கொடு,'' என்று பிரார்த்தனை செய்தார்.

காவலர்கள் மூடையை குளத்திற்குள் வீசினர்.

திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தள்ளிய போது கல்லோடு சேர்ந்து மிதந்தார். அது போல அதிசயம் இந்த குளத்திலும் நடந்தது. ஜெயந்த் இருந்த மூடை மூழ்குவதும், வெளியே தெரிவதுமாக இருந்தது. சிறிது நேரத்தில் அங்குள்ளவர்களின் கண்கள் கூசின. பளபளக்கும் பொன் நிறம் கொண்ட ஆமை தன் முதுகில் மூடையைச் சுமந்தபடி கரைக்கு வந்தது.

மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் அலறியடித்து ஓடி வந்தான். மூடையை அவிழ்த்தபோது, அதில் ஜெயந்த் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருந்தார். அவரது திருவடியில் மன்னரும், மக்களும் விழுந்து வணங்கினர். பெருமாளே கூர்மத்தின் (ஆமை) வடிவில் வந்து அவரைக் காப்பாற்றியதை புரிந்து அதிசயித்தனர்

'மகான் ஜெயந்த் வாழ்க' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்த நேரத்தில் கரையில் நின்ற ஆமை தண்ணீருக்குள் மாயமாய் மறைந்தது.

அதன்பிறகு மன்னன் அவரை குருவாக ஏற்றுக் கொண்டான். அதன் பின் மன்னனும், நாட்டு மக்களும் பக்தியில் சிறந்து விளங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us