
ஆக.22, 2024 - மகா சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு குறிப்பிட்ட திதி சிறப்பானது. அது வளர்பிறை, தேய்பிறை என ஏதோ ஒன்றில் வரும். முருகனுக்கு வளர்பிறை சஷ்டி, சிவபெருமானுக்கு தேய்பிறை சதுர்த்தசி, ராமருக்கு வளர்பிறை நவமி, கிருஷ்ணருக்கு தேய்பிறை அஷ்டமி, அம்பாளுக்கு பவுர்ணமியே சிறப்பு. ஆனால் விநாயகருக்கோ வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதியும் சிறப்பு.
அவர் பிறந்தது என்னவோ வளர்பிறை சதுர்த்திதான். என்றாலும் தேய்பிறை சதுர்த்தி என்பது அவருக்கு பிடிக்கும். இதையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
'ஸங்கட ஹர' என்றால் 'சங்கடங்களை தீர்ப்பவர்' என பொருள். இந்த சதுர்த்தியை விநாயகரே ஏற்படுத்தினார். குண்டாக இருக்கும் விநாயகரைக் கண்ட சந்திரன் கிண்டல் செய்தார். பதிலடியாக சாபமிட்டார் விநாயகர். அதற்காக வருந்திய சந்திரன் மன்னிப்பு கோரினார்.
மன்னித்ததோடு தன்னுடன் சேர்த்து சந்திரனையும் வழிபட வேண்டும் என ஆணையிட்டார் விநாயகர். இது பற்றி, 'தேய்பிறை சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் மனம் குளிர்வேன். சங்கடங்களை போக்குவேன். பூஜையின் முடிவில் சந்திரனையும் வணங்குங்கள்' என்றார் விநாயகர்.
இந்நாளில் விநாயகர் போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். மாலையில் வானில் தெரியும் சந்திரனை தரிசித்து விட்டு விநாயகரை வழிபட வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக ஆவணி மாதத்தில் வரும் மஹாசங்கடஹர சதுர்த்தியன்று விரதம் தொடங்கி ஓராண்டு இதைச் செய்வர். இதனால் சங்கடங்கள் பறந்தோடும்.