ADDED : ஜூன் 23, 2017 09:34 AM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், பொம்மை நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு: மது, கைடபர் என்னும் அசுரர்கள், பெருமாளின் தேவிகளான ஸ்ரீதேவி, பூதேவியை கடத்திச் செல்ல வந்தனர். அப்போது பெருமாள் நித்திரையில் இருந்தார். அவரை எழுப்ப விரும்பாத பூதேவி, பெருமாளின் திருவடி அருகிலும், ஸ்ரீதேவி அவரது மார்பிலும் ஒளிந்து கொண்டனர். பெருமாளுக்கு படுக்கையாக இருந்த ஐந்து தலை நாகமான ஆதிசேஷன், விஷ ஜூவாலையை கக்கி, அசுரர்களை விரட்டியது. இருப்பினும், பெருமாளை எழுப்பாமல், தானே முடிவெடுத்து அசுரர்களை விரட்டியதால், அவர் தன்னைத் திட்டுவாரோ என பயந்து போன பாம்பு தன் தலைகளைச் சுருக்கிக் கொண்டது. ஆனால் கண்விழித்த பெருமாள், ஆதிசேஷனைப் பாராட்டினார். எஜமான் இல்லாத நேரத்தில், அவரது உடமைகளைப் பாதுகாப்பது பணியாளனின் கடமை என்றார். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் இங்கு ஆதிசேஷன், ஐந்து தலைகளையும் சுருக்கியபடி இருப்பதைக் காணலாம். மூலவர் சத்தியமூர்த்தி பெருமாள் ஒரு கையில் பிரயோகச் சக்கரமும், மற்றொரு கையில் சங்கும் வைத்துள்ளார். இவரது
பெயரால் இத்தலம் 'சத்ய க்ஷேத்திரம்' எனப்படுகிறது.
கதை சொல்லும் கருவறை: இத்தலத்தின் உண்மைப்பெயர் திருமெய்யம். 'திருமெய்யர்' என்னும் பெயருடன் பெருமாள், தனி சன்னதியில் வீற்றிருக்கிறார் பிற்காலத்தில் திருமயம் என மாறியது. பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் இந்தப் பெருமாள் கண்கள் மூடி, மெல்லிய புன்னகையுடன், வலது கையால் ஆதிசேஷனை அணைத்தபடி இருக்கிறார். தேவர்கள், ரிஷிகள், பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா, மார்பில் மகாலட்சுமி, மது கைடப அசுரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சம்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர்கள் சத்தியமூர்த்தி, திருமெய்யருக்கு தைலக்காப்பு செய்யப்படும். உற்ஸவர் 'அழகிய மெய்யர்' எனப்படுகிறார். பல்லவர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அருகில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்) கோயில் உள்ளது. இரு கோயில்களும் மலைச்சரிவில், குடைவறைக் கோயில்களாக உள்ளன.
பிரார்த்தனை: இங்குள்ள உஜ்ஜீவனத் தாயாரை வழிபட்டால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் தாயாருக்கு மண்ணாலான விளையாட்டு பொம்மைகள் காணிக்கை அளிப்பதாக வேண்டுகின்றனர்.
எப்படி செல்வது:
* மதுரை - புதுக்கோட்டை சாலையில் 85 கி.மீ.,
* திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக 64 கி.மீ.,
நேரம்
காலை 6:00 - 11:00 மணி
மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 99407 66340, 04322 -221 084

