ADDED : நவ 04, 2016 12:12 PM

முருகப்பெருமானை மயிலில் அமர்ந்த கோலத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால் வள்ளியும் தெய்வானையும் மயிலில் அமர்ந்துள்ளதை பார்த்திருக்கிறீர்களா!
சிவகங்கை மாவட்டம் இரணியூர் ஆட்கொண்டநாதர் கோவிலில் இந்த அரிய காட்சியைத் தரிசிக்கலாம். கந்தசஷ்டியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு: திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரணியனை சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனை வேண்டினார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார். அத்துடன் திருமாலின் வேண்டுதலை ஏற்று, இத்தலத்தில் 'ஆட்கொண்டநாதர்' என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, 'நரசிம்மேஸ்வரர்' என்றும் பெயருண்டு. இரணியனைக் கொன்ற பாவத்துக்கு விமோசனம் தந்த ஊர் என்பதால் ஊருக்கு 'இரணியூர்' என்று பெயர் ஏற்பட்டது.
விமானத்துடன் சிவ தரிசனம்: ஆட்கொண்டநாதர், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். கோவில்களில் உள்ள கோபுரமும், விமானமும் சுவாமியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் விமானத்தையே சுவாமியாக கருதி வழிபடும் வழக்கம் இருக்கிறது. இக்கோவில் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு
அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணமும் நடத்துகின்றனர். மாசிமகத்தன்று சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அம்பாள் சிவபுரந்தேவி தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். நரசிம்மர், சிவனை வழிபட்டபோது உடனிருந்த அம்பிகை, அண்ணனின் தோற்றத்தைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்தாள். இவள் உக்கிரமானபோது உருவான சக்திகள், இவளது சன்னிதி எதிரிலுள்ள மண்டப தூண்களில் நவசக்திகளாக காட்சி தருகின்றனர். அஷ்டலட்சுமி மண்டபமும் இருக்கிறது.
அம்பாள் சன்னிதி அருகில் பைரவர் சன்னிதி இருக்கிறது. இவர் இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சிதருகிறார். இவருக்கு கார்த்திகை மாதத்தில் 6 நாட்கள் சம்பகசூர சஷ்டி விழா நடக்கிறது.
குதிரை வாகன குபேரன்: பிரகாரத்தில் முருகன் மயிலில் அமர்ந்துள்ளார். அருகில் இருக்கும் வள்ளி, தெய்வானையும் மயில் வாகனங்களில் தனித்தனியாக அமர்ந்திருப்பது காணக்கிடைக்காத காட்சி. பிரகாரத்தில் உள்ள விநாயகர் 'வித்தக விநாயகர்' எனப்படுகிறார். மாணவர்கள் இவரிடம் கல்வி சிறக்க வேண்டிக்கொள்கிறார்கள். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் காட்சி தருகிறார். குபேரனும், வாயு பகவானும் குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர். நவக்கிரக, கஜலட்சுமி சன்னிதிகளும் உண்டு.
இருப்பிடம்: மதுரை - தஞ்சாவூர் சாலையில் திருப்புத்தூர் 60 கி.மீ. இங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் கீழச்சீவல்பட்டி. இங்கிருந்து 4 கி.மீ., சென்றால் இரணியூர்.
நேரம்: காலை 6:00 - மதியம் 12:00 , மாலை 5:00 - இரவு 7.30 மணி.
அலை/தொலைபேசி: 98424 80309, 04577 - 265 645.

