/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சரபேஸ்வரரின் இறக்கை எந்த தெய்வத்தின் வடிவம்
/
சரபேஸ்வரரின் இறக்கை எந்த தெய்வத்தின் வடிவம்
ADDED : நவ 25, 2016 09:37 AM

வால்மீகி முனிவர் வழிபட்ட வால்மீகீஸ்வரர் கோவில் வேலூர் அருகிலுள்ள மேல்விஷாரத்தில் உள்ளது. இங்கேயுள்ள சரபேஸ்வரரின் இறக்கை நவராத்திரி நாயகிகளுள் ஒருத்தியின் அம்சமாக உள்ளது. இவரை வழிபட்டால் முன்னோர் தொடர்பான பிதுர்தோஷம், கிரக தோஷம் விலகும்.
தல வரலாறு: வால்மீகி, வசிஷ்டர், பரத்வாஜர், அத்திரி, அகத்தியர், கவுதமர், காஷ்யபர் ஆகிய சப்தரிஷிகள் வேலூர் பகுதியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தங்கி சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இதில் வால்மீகி முனிவர் லிங்கம் ஸ்தாபித்து பூஜித்த தலம் மேல்விஷாரம். வால்மீகிக்கு காட்சியளித்ததால் இங்குள்ள சிவன், 'வால்மீகீஸ்வரர்' என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார்.
எட்டி என்ற விஷ மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் இத்தலம், 'மேல்விஷாரம்' என்று பெயர் பெற்றது.
ஐஸ்வர்ய பூஜை: வடிவுடையம்பிகை தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள். ஆடி மாதம் வளர்பிறை திரிதியையன்று இவளுக்கு, 'ஸ்வர்ண கவுரி பூஜை' நடக்கும். கலசத்தில் பாலாறு தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து, லலிதா சகஸ்ரநாமம் ஜபித்து பூஜை நடத்துவர். அதன் பின் யாக சாலை பூஜை, கன்யா பூஜை நடக்கும். தேவ கன்னியர் இந்த பூஜையை நடத்துவதாக ஐதீகம்.
மகாலட்சுமிக்கு சிவன் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளித்ததன் அடிப்படையில் சுவர்ண கவுரி பூஜை செய்யும் முன்பு சிவனுக்கு, 'ஐஸ்வர்ய பூஜை' நடத்துவர். அப்போது மங்களப் பொருட்களால் சிவனை அலங்கரிப்பர். செல்வ வளத்தை வேண்டுவோர் இதில் பங்கேற்கின்றனர்.
சூலினி துர்க்கா பூஜை: நரசிம்மரின் கோபத்தை தணிக்க சிவபெருமான், சரபேஸ்வர வடிவத்தில் தோன்றினார். சரபேஸ்வரரின் உடலில் இறக்கை இருக்கும். அந்த இறக்கையை 'சூலினி துர்க்கை' என்பர். நவராத்திரியின் எட்டாம் நாளில் அம்பாளை சூலினி துர்க்கையாக வழிபடுவது வழக்கம். அதன் அடிப்படையில் இங்குள்ள வடிவுடையம்பிகையையும், சூலினி துர்க்கையாகக் கருதி ஹோமம் நடத்துவர்.
இந்நாளில் ஐந்து பெண் குழந்தைகளுக்கு கன்யா பூஜை செய்யப்படும். கிரக, பிதுர் தோஷம் நீங்க அம்பிகைக்கு இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பூர் வசிஸ்டேஸ்வரர் கோவிலில் சரபேஸ்வரரை தரிசிக்கலாம்.
ரிஷி பூஜை: பாலாற்றங்கரையில் அமைந்த கோவில் இது. புற்றிலிருந்து தோன்றிய வால்மீகிக்கு சிவன் காட்சி அளித்த தலம் என்பதால் இங்குள்ள லிங்கம், புற்று வடிவில் உள்ளது. சிவன் சன்னிதி எதிரில் உள்ள மண்டபத்தில், வால்மீகி சிவனை வணங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆவணி வளர்பிறை பஞ்சமியில் இவருக்கு 'ரிஷி பூஜை' நடக்கும். பவுர்ணமியன்று சிவன், அம்பிகைக்கு யாகம் நடத்துகின்றனர். இந்த யாகத்தில் பயன்படுத்தும் ஒரு உரிக்காத மட்டைத் தேங்காயை, அம்பாள் பாதத்தில் வைப்பர். இரண்டு நாள் கழித்து அத்தேங்காயை உடைத்து பூஜை செய்வர். யாகத்தின் பலனை அம்பிகை, தேங்காய் மூலமாக பெற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. திருமணத்தடை நீங்கவும், கடன்பிரச்னை தீரவும் சிவனுக்கு அரிசி மாவினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பிரகாரத்தில் மகாகணபதி, பாலமுருகன், கருமாரியம்மன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. இத்தலத்து சிவனை விஸ்வாமித்திரரும் பூஜித்துள்ளார்.
திருவிழா: ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்
இருப்பிடம்: வேலூர்- ஆற்காடு சாலையில் 15 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 9:00 மணி, மாலை 5:00- இரவு 8.30 மணி
அலைபேசி: 93446 55747.
க்ஷடாரண்ய கோவில்கள்
வேலூர் நகரைச் சுற்றி க்ஷடாரண்யம் என்னும் ஏழு சிவன் கோவில்கள் உள்ளன. வேலூர் - ஆற்காடு ரோட்டில் உள்ள இந்த ஏழு கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் தீராத நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
மேல்விஷாரம் - வால்மீகீஸ்வரர்
வேப்பூர் - வசிஷ்டேஸ்வரர்
புதுப்பாடி - பரத்வாஜேஸ்வரர்
குடிமல்லூர் - அத்திரீஸ்வரர்
வன்னிவேடு - அகத்தீஸ்வரர்
அவரக்கரை - காஷ்யேஸ்வரர்
காரை - கவுதமேஸ்வரர்

