ADDED : மார் 10, 2017 12:51 PM

* வேலை செய்வது பிரார்த்தனையாக இருக்கட்டும். ஏன் என்றால் வேலை ஒன்றே, கடவுளுக்குச் செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கை.
* வாழ்வில் எந்த நிலையிலும் நேர்மை தவறாதீர்கள். நேர்மையான மனம் உடையவர்களுக்கு, மகிழ்ச்சி என்னும் பரிசை கடவுள் நிரந்தரமாகத் தந்து விடுவார்.
* பிறரது விஷயத்தில் புதிய மாறுதல் உண்டாக்க விரும்பினால், அந்த மாற்றம் உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும். எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது.
* ஒழுக்கம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக மதிப்பது நம் கடமை. இதில் நமது சுயவிருப்பத்திற்கோ, எதிர்பார்ப்புக்கோ சிறிதும் இடமில்லை.
* உண்மை, நேர்மை ஆகிய இரு பண்புகளும் மனத்தூய்மைக்கு மிகவும் அவசியம். மனத்தூய்மையின்றி கடவுளை வழிபட்டு பயனில்லை.
* பேசாமல் அமைதியுடன் இருக்கப் பழகி விட்டால் பிரச்னைகளை வாழ்வில் தவிர்த்து விடலாம். எப்போதும் அமைதி காத்து மனவலிமையுடன் இருக்கப் பழகுங்கள்.
* கீழான வேலை என்று எதுவும் இல்லை. வேலையை எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டால் எல்லா வேலையும் நல்ல வேலை தான்!
* நாம் பெற்றிருக்கும் அறிவு கடவுளிடம் இருந்தே வரப் பெற்றது. கடவுளின் படைப்பான இயற்கையில் இருந்தும், அவருடைய படைப்புகளில் இருந்துமே
மனித குலம் எல்லா அறிவையும் பெற்றுக் கொண்டது.
* எந்த உணர்ச்சியையும் அடக்கி வைக்காதீர்கள். கோபம், ஆசை ஆகிய உணர்ச்சிகளை அடக்கினால், அது முன்னிலும் பல மடங்கு ஆவேசத்துடன் எழுவதைக் காணலாம்.
* உண்மையான அறிவைப் பெற வளைந்து கொடுக்கும் பண்பு வேண்டும். வளைந்து கொடுக்கிற மனம் முன்னேற்றத்திற்கான முயற்சியில் பின்னடைவு காண்பதில்லை.
* வாழ்வில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். எது வந்தாலும் மன வருத்தம் வேண்டாம். பொறுமையோடு வாழ்வை எதிர்கொள்ளுங்கள்.
* காலத்தை மதியுங்கள். உடனடியாக இப்போதே நற்செயல்களில் ஈடுபடுங்கள். வளர்ச்சி எதுவும் இல்லாமல் வீணாகக் காலத்தைக் கழித்தால், அதற்காக பிற்காலத்தில் வருந்த நேரிடும்.
* யாரும் உலகில் தனியாளாக இல்லை. எப்போதும் கடவுள் நம்முடன் இருக்கிறார். அவர் மீது முழு நம்பிக்கை வைத்து பணியாற்றுங்கள்.
* சாப்பாட்டில் அமரும் முன் முதலில் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். சாதிக்கும் வல்லமையும், ஊக்கமும் அந்த உணவின் மூலம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* மற்றவர் மகிழ்ச்சியடையும் போது மகிழ்வதும், பிறர் துயரம் கண்டு வருந்துவதுமே இரக்க குணம் படைத்தவர்களின் தனிச் சிறப்பு.
* எந்த ஒரு விஷயத்தையும் அமைதியுடன் அணுகுவதே வலிமையின் அடையாளம். பலவீனமான மனம் கொண்டவனே எப்போதும் 'கடுகடு' என்று முகத்தை வைத்திருப்பான்.
* முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தற்புகழ்ச்சியை கைவிடுங்கள். ஏனெனில் இது உங்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
* எதிர்பார்ப்பு இல்லாமல் கடவுள் மீது பக்தி செலுத்துவதே சிறந்தது. இதுவே மேலான மகிழ்ச்சியைத் தரும்.
* தவறை உணர்ந்து மனம் வருந்தினால் அதற்கான மன்னிப்பு நிச்சயம். அதை மறைக்கவோ, மறுக்கவோ செய்வது மேலும் அதைப் பெரிதாக்கி விடும்.
சொல்கிறார் ஸ்ரீஅன்னை

