மீண்டும் நடிப்பிற்கு திரும்பும் நிவேதா பெத்துராஜ்
‛‛ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன்'' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். துபாயில் வசித்து வரும் இவர் 2023ம் ஆண்டுக்கு பின் படங்களில் நடிக்கவில்லை. சினிமாவிற்கு பிரேக் விட்டு ரேஸில் ஆர்வம் காட்டினார். துபாய் தொழிலதிபர் ரஜித் இப்ரான் உடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நின்றுவிட்டது.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் நடிப்பிற்கு இவர் திரும்புகிறார். தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் முதல் முறையாக நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து புதிய படம் இயக்குகிறார். இதற்கு 'ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே த்ரிவிக்ரம் இயக்கிய அல வைகுந்தபுரம் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார் என குறிப்பிடத்தக்கது.