உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் பாரதிராஜா காலமானார்

இயக்குனர் பாரதிராஜா காலமானார்

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என கொண்டாடப்பட்ட பாரதிராஜா, 84, உடல்நலக்குறைவால் காலமானார். மகன், நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பின் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட பாரதிராஜா சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதத்திற்கு முன் வீடு திரும்பிய அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17ல் பிறந்தவர் பாரதிராஜா. இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி ஆகும். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்த பாரதிராஜா, இயக்குநர் பி புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து சினிமாவின் நுணக்கங்கள் அனைத்தையும் கற்றார்.

16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ் செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

ஸ்டுடியோவுக்குள் நடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். இயக்கம் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் பாரதிராஜா.

பாரதிராஜா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ரத்து

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அனைத்து தமிழ் சினிமாக்களின் படப்பிடிப்பும் நாளை ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உடல் அடக்கம்
பாரதிராஜா குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று இரவு வரை பாரதிராஜாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள வீ்ட்டில் வைக்கப்படும். இரவு 9 மணிக்குமேல், அவரது உடல் சொந்த ஊருக்கு செல்லப்படுகிறது. பின்னர், வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டில் நாளை (ஜூன் 11) பிற்பகல் 3 மணிக்கு மேல் அவரது உடல் அடக்கம் செய்யப்படும். அவருக்கு அரசு மரியாதை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !