அதர்வாவுடன் நட்பை தொடர்வேன் : பிரீத்தி முகுந்தன்
ஆகாஷ் முரளி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான 'இதயம் முரளி' படம் சமீபத்தில் வெளியானது. இதில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், மோனிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்டு பிரீத்தி முகுந்தன் பேசியதாவது:
இந்தப் படத்தின் பயணம் தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நாள் ஒன்றாக உழைத்த இந்தப் பயணத்தை நிறைவு செய்து இப்போது உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். படம் முடிந்து திரையில் பார்த்தபோது, ஒரு நடிகையாக இல்லாமல், ஒரு ரசிகையாக நான் அந்தப் பாத்திரத்தை ரசித்தேன். அழகான, மனதை வருடும் ஒரு திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகப்பெரிய திருப்தியாக இருந்தது.
இந்தப் படத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றி. கயாடு, மிகவும் அன்பானவரும் திறமையான நடிகையும் தான். 'அமுதா' கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது மிகவும் சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். அதை மிக அழகாகச் செய்திருக்கிறார். வெளியில் பலர் எங்களை ஒப்பிட்டுப் பேசலாம். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மனதார வாழ்த்துபவர்கள்தான். அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
நான் சந்தித்த நடிகர்களில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் அதர்வா. எப்போதும் மிகவும் பணிவாகவும், அனைவரையும் சமமாக மதித்து நடந்து கொண்டார். பெரிய நடிகர் என்பதை ஒருபோதும் உணர்த்தாமல், ஒவ்வொருவரையும் மரியாதையுடன் நடத்தினார். குறிப்பாக படத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம். அந்த நட்பு நீண்ட காலம் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.