ஷாருக்கானின் கிங் ஆடியோ உரிமையைக் கைப்பற்ற போட்டி
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் கிங் என்ற கேங்ஸ்டர் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுஹானாகான் இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இசை உரிமையைக் கைப்பற்ற சில ஆடியோ நிறுவனங்கள் பல கோடிக்கு பேசி வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் சினிமாவில் இதுவரை ராமாயணா மற்றும் துரந்தர் ஆகிய படங்கள் மட்டுமே இசை உரிமையில் சாதனைத் தொகையைப் பெற்றிருந்த நிலையில், கிங் படம் அந்த சாதனைகளை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன், அனில் கபூர், அபய் வர்மா மற்றும் அர்ஷத் வார்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிங் படம் 2026 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்த பதான் படத்திற்குப் பிறகு, இயக்குநர் சித்தார்த் ஆனந்தும், ஷாருக்கானும் மீண்டும் இணையும் திரைப்படம் இதுவாகும்.
இந்த படத்தில் ஷாருக்கான் வெள்ளை நிற ஹேர் ஸ்டைலுடன் முற்றிலும் புதிய ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றுகிறார். மேலும் இப்படத்தின், பயம் இல்லை, நான் ஒரு பேரழிவு என்ற பஞ்ச் வசனம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்செலவில் 450 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.