அந்தரன்
தயாரிப்பு : ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
இயக்கம் : சந்தோஷ் ராவணன்
நடிப்பு : பிரஜன், இவானா வருண், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், சாம்பசிவம்
ஒளிப்பதிவு : கிஷோர் ராமச்சந்திரன்
இசை : ஹரி எஸ்.ஆர்.
வெளியான தேதி : ஜூன் 26, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2.5 / 5
ஹீரோயின் இவானாவை திருமணம் செய்ய நினைக்கும் ஒரு ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஆட்டோ டிரைவர் கொல்லப்படுகிறார். இன்னொருவர் விபத்தில் இறக்கிறார். மற்றொருவர் தற்கொலை செய்கிறார். இதற்கு காரணம் ஜாதிபாசத்தில் இருக்கும் தனது தந்தை என நினைக்கிறார் இவானா. போலீசில் புகார் கொடுக்கிறார். இந்த 3 பேர் இறப்பில் ஏதோ மர்மம் இருக்கிறது என நினைக்கும் போலீஸ் அதிகாரி பிரஜன் இந்த வழக்கை தீவிரமாக ஆராய்கிறார். பலர் மீது சந்தேகம் வருகிறது. சின்ன வயதில் இவானாவை காதலித்து ஊரை விட்டு ஓடிப்போனவர் பிரஜன், அவரும் ஒரு கட்டத்தில் இவானாவை திருமணம் செய்ய நினைக்க, அவரும் கொலை செய்யப்பட்டாரா? இந்த கொலைகளை செய்தது யார்? என்ன காரணம் என்பது அந்தரன் கதை.
போலீஸ் அதிகாரியாக வரும் பிரஜன் தான் கதையில் இருக்கும் சுவாரஸ்யமான கேரக்டர். அவரின் சந்தேகம், விசாரணை முறைகள், கொலையாளியை அவர் நெருங்கும் விதம், கிளைமாக்சில் அவர் உருவாக்கும் திட்டம் ஆகியவை பக்கா. தனது கேரக்டர் உணர்ந்து ஓரளவு பிரஜனும் ஓரளவு நடித்து இருக்கிறார், கம்பீரமாக இருக்கிறார். ஆனாலும், முக்கியமான இடங்களில் நடிக்காமல் அமைதியாக இருக்கிறார். அவர் கெட்அப், அவர் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் கதைக்கு பிளஸ்.
ஹீரோயினாக வரும் இவானா வருண் வழக்கமான ஹீரோயின் மாதிரி வருகிறார். காதலிக்கிறார், இறப்புகளை பார்த்து அழுகிறார், பிரஜன் மீது பாசத்தை பொழிந்து ரொம்பவே அமைதியாக நடிக்கிறார். ஆனால் கடைசியில் அரை மணி நேரம் ஒரு வித நடிப்பில், ஆளே மாறி அட இந்த பொண்ணு இப்படி நடிக்கிறதே? இப்படிப்பட்ட கேரக்டரை நாம் பார்த்தது இல்லையே என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசத்தியிருக்கிறார். அந்த விஷயம்தான் படத்தின் பெரிய பிளஸ்.
பல படங்களில் பார்த்து புளித்துபோன காதல், போலீஸ் விசாரணை , சந்தேகம் என முதல் பாதி நகர்கிறது. முத்தம் சம்பந்தப்பட்ட க்ளூ, அது தொடர்பான விசாரணை திகுதிகு. மற்றபடி கதை மெதுவாக நகர்கிறது. ஹீரோயின் கேரக்டரும், கிளைமாக்சில் நடக்கும் விஷயங்கள் மட்டும் புதுசாக இருக்கிறது.
கொல்லப்படுகிற 3 பேர் பின்னணி, சில திருப்பங்களை இன்னும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம். கதையில் வரும் பிளாஷ்பேக் அதில் சொல்லப்படும் விஷயமும் கொஞ்சம் பிரஷ். போலீஸ் அதிகாரி பிரஜன் டீமில் இருப்பவராக ஐஸ்வர்யா கண்ணன், பிரியங்கா செல்வி வருகிறார்கள். அவர்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஹீரோயின் அப்பாவாக வரும் சாம்பசிவம் நடிப்பும், அவர் சொல்லும் விஷயங்களும் ஓகே. பாடல்கள், ஒ ளிப்பதிவில் புதுமை இல்லை. சில விஷயங்கள் ரிபீட் ஆகிறது.
3 கொலை ஒரு கட்டத்தில் 5 கொலை ஆகிவிடுமோ என்ற பயம் வருகிறது. அவர் கொலை செய்து இருப்பாரா? இவர் செய்து இருப்பாரா என்ற சந்தேகம் வருகிறது. அதெல்லாம் திரைக்கதையில் பிளஸ். ஆனால், கிரைம் கதைக்கான பல விஷயங்கள் மிஸ்சிங். டாக்டராக வரும் அனுபமாகுமார் கேரக்டர், அவர் சொல்லும் விஷயங்கள் பகீர் என்று இருக்கிறது. கிளைமாக்சுக்குபின் வரும் பெண்கள் சம்பந்தப்பட்ட தன்னம்பிக்கை காட்சிகள் நம்பிக்கை. ஆனாலும், முதற்பாதி கதையில் புதுமை இல்லை. இடைவேளைக்குபின், அதிலும் கடைசி அரை மணி நேரம் மட்டுமே பார்வையார்களை இயக்குனர் கட்டிப்போடுகிறார். அதுதான் படத்தில் இருக்கும் புது விஷயம். மற்றபடி வழக்கமான படம்.
அந்தரன் - கடைசி அரைமணி நேரம் மட்டும் உருப்படி