PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

'நல்ல வேளை சுதாரித்தோம்; இல்லாவிட்டால் முதலுக்கே மோசம் வந்திருக்கும்...' என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இந்த மாநிலத்தில், சமீபத்தில் நான்கு இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ் மூன்று பேரையும், பா.ஜ., ஒருவரையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும்.
ஆனால், பா.ஜ., கூட்டணியில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐந்தாவதாக ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலரை வளைத்து வெற்றி பெற்று விடலாம் என, தேவகவுடாவின் மகன் குமாரசாமி உள்ளிட்டோர் நம்பினர்.
சித்தராமையாவும், சிவகுமாரும் சுதாரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை முன்கூட்டியே சொகுசு விடுதியில் தங்க வைத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டனர்.
இதனால், குமாரசாமி தரப்பு கையை பிசைந்தது. கடைசியில், அவரது கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஹிமாச்சலில் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்யாததால், அந்த கட்சியின் சில எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்து விட்டனர்.
'இந்த விஷயத்தில், நாங்கள் இதற்கு முன் பல கசப்பான அனுபவங்களை சந்தித்துள்ளோம். அதனால் உஷாராகி விட்டோம். இல்லையெனில், ஹிமாச்சல் காங்கிரஸ் போல், நாங்களும் அவமானப்பட வேண்டியிருந்திருக்கும்...' என்கின்றனர், இங்குள்ள காங்., நிர்வாகிகள்.

