Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பெருமை தேவையா?

பெருமை தேவையா?

பெருமை தேவையா?


PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.பி.கார்த்திக் குமார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நடந்த, 32 திருமணங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

அவ்விழாவில் ஸ்டாலினுக்கு பலர் புத்தகங்களை பரிசாக வழங்கினர். கடைசியாக அர்ச்சகர் ஒருவர், ஒரு தட்டில் மாலையுடன் கோவில் பிரசாதங்களை வழங்க, அதை தவிர்த்து விட்டார் ஸ்டாலின்.

இச்செயல், இறைவனை அவமதிப்பதற்கு ஒப்பாகும். இம்மாதிரியான ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எதற்காக செய்ய வேண்டும்?

அதேநேரம், பிரசாதத்தை வாங்குவதை தவிர்த்த ஸ்டாலின், திருத்தணி கோவிலில் பூஜித்து வழங்கப்பட்ட வெள்ளியால் செய்யப்பட்ட வேலை மட்டும் பெற்றுக்கொண்டது எப்படி? மதிப்பு கூட்டப்பட்ட பொருள் என்பதாலா?

மேலும், அவ்விழாவில் முதல்வர் பேசும்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை என்பதில் உள்ள, 'ஹிந்து' என்ற வார்த்தையை தவிர்த்து, அறநிலையத்துறை என்றே நிகழ்ச்சி முழுதும் குறிப்பிட்டார். ஹிந்து என்பது தீண்டத்தகாத வார்த்தையா என்ன?

அவ்வளவு வெறுப்பு இருந்தால், ஹிந்துக்கள் தனக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூற வேண்டியது தானே!

இதில், அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமணங்களில், 150 திருமணங்கள் தன் தலைமையில் நடந்ததாகவும், 177 கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் பெருமை பேசுகிறார் ஸ்டாலின்.

இதற்கெல்லாம் தமிழக அரசு சார்பிலா நிதி வழங்கப்பட்டது? அத்தனையும் காணிக்கை மற்றும் உபயதாரர்கள் வாயிலாக வழங்கப்பட்ட பணம் தானே... இதில் ஸ்டாலின் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

கோவில் நிதியிலிருந்து வணிக வளாகம், ரிசார்ட், கல்லுாரிகள், திருமண மண்டபங்கள் கட்டக் கூடாது என்பது ஹிந்து அறநிலையத் துறையின் சட்ட விதிகளில் ஒன்று!

ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது... கோவில் சொத்துக்களை வைத்து, பழுதடைந்த கோவில்களை புதுப்பிப்பதை விடுத்து, கல்யாண மண்டபங்களும், வணிக வளாகங்களும் கட்டப்படுகின்றன.

'பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பது போல் தான், இன்று கோவில்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது!

இதில், கும்பாபிஷேகம் நடந்ததாக பெருமை பேசுவது தேவையா?



உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு என்ன மரியாதை?


நா.ராஜகோபாலன், வட்டாட் சியர், (பணி நிறைவு), பல்லடம், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான் ஓய்வு பெற்ற வட்டாட்சியர்; மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், என் தந்தை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு, அரசாணை 120 பிறப்பித்து, என் தந்தைக்கு, அவரது மறைவிற்கு பின் முதன்மை கல்வி அலுவலர் இணை இயக்குநர் பதவி உயர்வு வழங்கி, ஓய்வூதிய பலன்களுக்கு மட்டுமே தகுதியானவர் என தெரிவித்திருந்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார் - கருவூல அலுவலகத்தில் நிலுவை தொகையை பெற்றேன். ஆனால், 6 மற்றும் 7வது நிதிக்குழு ஆணையின்படி, அடிப்படை ஊதியத்தில், 50 சதவீதம் ஓய்வூதியம் என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், நிலுவை தொகையை வழங்கக் கோரி பல்லடம் சார் - கருவூல அலுவலருக்கு மனு செய்தேன்.

ஆனால், சார் - கருவூல அலுவலரோ, அரசாணை எண், 120ஐ மறைத்து, அடிப்படை விதிகளை சுட்டிக் காட்டி, நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக சந்தேகம் எழுப்பி, மாவட்ட கருவூல அலுவலருக்கு அனுப்பினார்.

மாவட்ட கருவூல அலுவலர், கருவூல கணக்கு துறை ஆணையருக்கு அனுப்பினார்.

ஆணையரை நேரில் சந்தித்து, அரசு ஆணை, 120 குறித்து விளக்கம் அளித்து, அதை பரிசீலிக்குமாறு மனு கொடுத்தேன்.

ஆனால், கருவூல கணக்கு துறை ஆணையர் எதையும் கருத்தில் கொள்ளாமல், நிதித்துறை செயலருக்கு தெளிவுரை கேட்டு கடிதம் அனுப்பினார்.

கடிதம் அனுப்பி இரண்டரை ஆண்டுகள் கழிந்து விட்டன. பலமுறை கடிதம் அனுப்பியும், நேரில் முறையிட்டும் பலன் இல்லை.

முதல்வர் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்பினேன். அது, திருப்பூர் மாவட்ட கருவூல அலுவலருக்கே திரும்பி வந்தது. அவரும் நல்ல பிள்ளையாக, 'அரசிடம் தெளிவுரை கேட்கப் பட்டுள்ளது; பதில் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மீண்டும் நிதித்துறை ஓய்வூதிய பிரிவிற்கு மனு அனுப்பி, விரைவில் தெளிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். மனு நிராகரிக்கப்பட்டது என குறுஞ்செய்தி வந்தது.

இரண்டரை ஆண்டு கழிந்தும், 12 கடிதங்கள் நிதித்துறைக்கு அனுப்பியும், நேரில் முறையிட்டும் பலன் இல்லை. நிதித்துறை யில் விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு என்ன மரியாதை?



எளிதான காரியமா?


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது. மீறினால், வினாத்தாள்கள் தயாரிக்கும் குழுவில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்படுவர்' என்று கூறியுள்ளார், தமிழக தேர்வாணைய தலைவர், பிரபாகர். இதை அரசியல் தலையீடின்றி செயல்படுத்தினால் வரவேற்கலாம்!

கடந்த சில ஆண்டுகளாகவே ஆளுங்கட்சி புகழ்பாடும் விதமாக கேள்விகள் கேட்கப்படுவதும், அவைகள் கண்டனத்திற்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது.

காரணம், ஆளும் அரசு, இதுபோன்ற துறைகளில் தன் ஆதரவாளர்களை நியமனம் செய்துள்ளது தான்!

உதாரணத்திற்கு, பல்கலை துணைவேந்தர்கள், மாநில மனித உரிமைக் கழகம், தேர்வாணையங்கள், அரசு விருதுகள், தேர்வுக் குழு, தமிழ்நாடு பாடநுால் கழகம் போன்றவற்றை சொல்லலாம்!

இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியோருக்கு வழங்கப்படும், 'தகைசால் தமிழர் விருது' போன்ற பல விருதுகள் ஆளும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களுக்கே வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்தோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால், அரசு அமைப்புகளின் மீதான மதிப்பும், மரியாதையும் கேள்விக்குறியாகிறது.

உண்மையில் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான் அரசின் நோக்கம் என்றால், கட்சி சார்பற்றவர்களை அரசு அமைப்புகளில் நியமனம் செய்ய வேண்டும்.

ஆனால், இன, மொழி, மத, ஜாதி, பிரிவினைவாதம் என தரம் தாழ்ந்த, மலிவு அரசியல் செய்து வரும் கட்சிகளுக்கு, இது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap