PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM

ஏ.வி.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு பழைய தமிழ் திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, தமாசு நடிகர் செந்திலிடம் 1 ரூபாய் கொடுத்து, இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி வரச் சொல்வார். கடையில் இரண்டு பழங்களை வாங்கிய செந்தில், ஒரு பழத்தை தின்றுவிட்டு, மீதி உள்ள ஒரு பழத்தை மட்டும் கவுண்டமணியிடம் கொடுப்பார்.
அதை வாங்கியவர், 'ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே?'என்று கேட்பார். 'இன்னொன்னுதான் இது' என்பார் செந்தில். பொறுமையாக அவருக்கு விளக்கி, 'ரெண்டு பழம் வாங்கி வரச்சொன்னேன்; ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே?' என்று கேட்பார் கவுண்டமணி. செந்திலும் சளைக்காமல், 'இன்னொன்னு தான் இது' என்று அதே பதிலை திரும்பத் திரும்பச் சொல்லி,கவுண்டமணிக்கு டென்ஷன் ஏற்றுவார்!
அதுபோன்று, இன்று தமிழகத்தில் வித்தியாசமான, 'வாழைப்பழ தமாசு' அரங்கேறி வருகிறது. மத்திய அரசு, 'இதுதான் மும்மொழி கொள்கை; பயிற்று மொழி தமிழ்; தொடர்பு மொழி ஆங்கிலம், மூன்றாவதாக, விருப்ப மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கற்க வேண்டும்' என்கிறது.
தமிழக முதல்வரோ, 'மும்மொழி கொள்கையில் ஹிந்தி உள்ளது; எங்களுக்கு வேண்டாம்' என்கிறார்.
'ஹிந்தி படிக்க வேண்டாம்; ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்றுக் கொடுங்கள்...' என்கிறது மத்திய அரசு.
'அதுதான் ஹிந்தி வேண்டாம்!' என்கிறார் ஸ்டாலின்.
'நல்லா கேட்டுக்கங்க... விருப்ப மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி' என்கிறது மத்திய அரசு.
'அதுதான் ஹிந்தி' என்கிறார் ஸ்டாலின்.
- இப்படி அந்த திரைப்படத்தில் ரசித்த, 'வாழைப்பழ' உரையாடலை, இன்று, தமிழக முதல்வர் வாயிலாக கேட்டு, சிரிப்பதற்கு பதில் தலையில் அடித்துக் கொள்கின்றனர், தமிழக மக்கள்.
அப்படத்தில் பழத்தை தின்றுவிட்டு, அதை சமாளிக்க, தமாஷ் நடிகர் செந்தில், 'அது தான் இது' என்று திரும்பக் திரும்ப கூறியது போல், தமிழக முதல்வரும், டாஸ்மாக் ஊழல், கனிம வள கொள்ளை, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை சமாளிக்க, 'ஹிந்தி திணிப்பு' எனும் வாழைப்பழ பல்லவியை பாடுகிறார்.
கரகாட்டக்காரன் எனும் படத்தில் வந்த அந்த தமாசு சிரிப்பைத் தந்தது என்றால், தமிழக முதல்வரின் இந்த தமாசு, அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு எரிச்சலையே தருகிறது!
நிறுத்துங்கள் முதல்வரே உங்கள் வாழைப்பழ காமெடியை!
தீர்ப்பின் மீது நம்பிக்கை வரும்!
ஏ.எம்.ஏ.ராஜேந்திரன்,
காளையார் கோவிலில் இருந்து எழுதுகிறார்: சட்ட கல்லுாரி களில் படித்து
முடித்து வழக்கறிஞராக வருவோரில், 10ல் ஏழு பேர் அதற்கான தகுதி இல்லாமல்
இருக்கின்றனர் என, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசிஉள்ளார்.
இதுகூட
பரவாயில்லை என்று எண்ணக்கூடிய அளவுக்கு, ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற
மாவட்ட நீதிபதிகள் தேர்வில் ஒரு நீதிபதி கூட தேர்வாகவில்லை என்ற செய்தி
அதிர்ச்சியாக உள்ளது.
ஒருபுறம் வழக்கறிஞர்களுக்கு திறமை இல்லை என்ற
குற்றச்சாட்டு; மறுபுறம் மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு எழுதிய, 45 பேரில்
ஒருவர் கூட தேர்வாகவில்லை. 45 மதிப்பெண் பெற்றால் வெற்றி என்ற நிலையில்,
அதைக்கூட ஒருவராலும் பெறமுடியவில்லை என்றால், அவர்களது சட்ட அறிவு எந்த
அளவிற்கு இருக்கும்?
மீண்டும் இவர்களுக்கு தேர்வு நடத்த ஒடிசா உயர் நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.
நம்
நாட்டில் நீதிமன்றங்களில், 5 கோடி வழக்குகள் தேங்கி உள்ளதாம். இந்த
வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனில், சிறந்த வழக்கறிஞரும்,
நேர்மையான நீதிபதிகளும் தேவை.
சட்ட நுணுக்கங்களை முழுமையாக கற்காத, திறமை இல்லாத நீதிபதிகள் கையில், ஒரு நிராபதியின் வழக்கு சிக்கினால் என்ன ஆகும்?
அதனால்,
மத்திய - மாநில அரசுகள் நீதிபதிகள் தேர்விலும், நியமனத்திலும் அரசியலுக்கு
அப்பாற்பட்டு, திறமை மற்றும் நேர்மையின் அடிப்படையில் நியமிக்க வேண்டும்!
அப்போதுதான், தீர்ப்புகளின் மீது மக்களுக்கு நம்பிகை வரும்!
நொறுங்கும் சட்டம்!
தேவ்.பாண்டே,
செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மும்மொழிக்
கொள்கைக்கு ஆதரவாக, தமிழக பா.ஜ., சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து
இயக்கம் நடத்தப்படுகிறது.
முன்னாள் கவர்னரும், பா.ஜ., தலைவருமான
தமிழிசை கையெழுத்து இயக்கத்தை சென்னையில் நடத்த முயன்றபோது, அனுமதி
பெறவில்லை என்று கூறி, போலீசார் அவரை சுற்றிவளைத்து, சிறை பிடித்தனர்.
போலீசார் தடுக்கும் அளவிற்கு அவர் என்ன தேசவிரோத செயலா செய்தார்?
ஏதோ மிகப்பெரிய கலவரத்தை அடக்க வந்தது போல், எதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்?
பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, கையெழுத்து போட வருவோரை தடுத்து நிறுத்துவது தானே அவர்களது நோக்கம்!
மாநிலத்தில், ஒவ்வொரு நாளும் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன... அதைத் தடுக்கவே போதுமான அளவில் போலீசார் இல்லை.
ஆனால்,
ஒரு சாதாரண கையெழுத்து இயக்கத்தை தடுக்க, நுாற்றுக்கணக்கில் போலீசார்
குவிக்கப்படுகின்றனர் என்றால், சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்காமல் என்ன
செய்யும்?
ஆட்சியாளர்களுக்கு மக்களின் பாதுகாப்பை விட, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை ஒடுக்குவதே தலையாய கடமையாக உள்ளது!
சென்னை - காரப்பாக்கத்தில், அரசு பள்ளி அருகே மாணவர்களிடம்
கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகக் கூறி, பா.ஜ., நிர்வாகிகள் ஐந்து
பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது, காவல் துறை.
'நீட்' தேர்வு
ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுதும் பொதுமக்களிடமும், பள்ளிகளில் நுழைந்து
மாணவர்களிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தியபோது, எத்தனை பேர் மீது காவல்
துறை வழக்கு தொடுத்தது? இப்போது மட்டும் ஏன் கைது செய்கிறது?
மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா?
அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... அதையே எதிர்க்கட்சியினர் செய்தால் வழக்கு தொடுப்பரா?
காமராஜர்
- எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களோ, ஏன் முதல்வரே கூட
சட்டத்திற்கு புறம்பாக உத்தரவு பிறப்பித்தால், தைரியமாக, 'செய்ய முடியாது'
என்று மறுத்த எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்த காவல்துறை தான், இன்று
ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறிவிட்டது.
திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் வளையவில்லை; நொறுங்கிக் கொண்டு இருக்கிறது!