
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். கலெக்டர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அங்கிருந்த பெண் ஒருவர், கனிமொழியிடம் தயங்கியபடியே வந்தார்.
அவர் பேசும்போது, 'என் பெயர் அச்சுதக்கனி... ஆனால், ஆதார் கார்டில் கனி என உள்ளது. வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய கேட்டால், ஆதார் கார்டில் உள்ள பெயரை மாற்றி வருமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய சென்றால், 5,000 ரூபாய் கேட்கின்றனர்...' என்றார்.
உடனே கலெக்டர் இளம்பகவத், அங்கிருந்த தாசில்தாரை அழைத்து, 'அந்த பெண்ணுக்கு செய்ய வேண்டிய மாற்றத்தை செய்து கொடுங்கள்' என, அறிவுறுத்தினார்.
'வேறு ஏதும் தேவை என்றால் என் அலுவலகத்திற்கு வாருங்கள்' என, கனிமொழி கூறவே, 'என் ஓட்டு உங்களுக்கு தான், பயப்படாதீங்க' என அச்சுதக்கனி கூற, அனைவரும் சிரித்தபடியே நடந்தனர்.
