PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: 'சினிமாவில் சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்க கூடாது' என, தேசிய புகையிலை கட்டுப்
பாடு திட்டம் வழியே, 2003ல் விளம்பர தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் உள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில், 53 சதவீதத்திற்கு மேல் புகை பழக்கம் அதிகரிக்க, திரைப்படமே காரணம் எனக் கூறியுள்ளது. எதிர்கால சந்ததியினரின் உயிரை காக்க, அனைத்து நடிகர் -- நடிகையர், திரைப்படத் துறையினர் ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும்.
புகை மட்டுமா... கொலை, கொள்ளைகளை கூட, வழக்கில் சிக்காம எப்படி செய்யலாம்னு இன்றைய சினிமாக்கள் சொல்லி தருவது இவருக்கு தெரியலையா?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: லோக்சபா தேர்தல், நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. நான் பலனை எதிர்பார்த்து கட்சிப் பணி செய்பவன் அல்ல. யாரால் அ.தி.மு.க., சின்னாபின்னமாக்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்.
எது, எப்படியோ... பழனிசாமிஎதிர்பார்த்த மாதிரி நீங்களும் ஜெயிக்கல... நீங்க எதிர்பார்த்த மாதிரி அ.தி.மு.க.,வும் ஜெயிக்கல...நீங்க ரெண்டு பட்டது, தி.மு.க.,வுக்கு கொண்டாட்டமாகிடுச்சு!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'பகத் சிங் போல துாக்கிலிடுவர் என்றால், அதற்கும் நான் தயார்' என, சிறையில் சரணடையும் முன், அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சாராய வியாபாரிகளிடம் பல நுாறு கோடி ரூபாய் பேரம் பேசி, மக்களை போதையில் மூழ்கடிக்க கொள்கை வகுத்தவர், தன்னை பகத் சிங்கோடு ஒப்பிடுவது வெட்கக்கேடு.
அவராவது பேரம் பேசி கொள்கை வகுத்தவர் தான்... நம்மூரில் ஊரை கொள்ளையடித்து உலையில் போட்டவர்கள் பலரும், இதை விட ஏக வசனம் பேசியதை பார்த்ததில்லையா?
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: முன்பெல்லாம் தி.மு.க., சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களை அழைப்பர். தற்போது வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜை அழைக்கும் அளவுக்கு திராவிட மாடல் முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இதுல என்ன முன்னேற்றம்... எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாடு தானே இது!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழகத்தில் மகளிருக்கு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு பணி தரவில்லை என்பது வருத்தமான விஷயம்.
ஆட்சியை பிடிப்போமா, அமைச்சரவைக்குள்ள நுழைவோமான்னு நாட்டுல அமளி, துமளி நடந்துட்டு இருக்கு... இதெல்லாம் இப்ப யோசிப்பாங்களா?