/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' கட்டிங் ' கொடுத்துவிட்டு கலங்கும் மரக்கடத்தல் கும்பல்!
/
' கட்டிங் ' கொடுத்துவிட்டு கலங்கும் மரக்கடத்தல் கும்பல்!
' கட்டிங் ' கொடுத்துவிட்டு கலங்கும் மரக்கடத்தல் கும்பல்!
' கட்டிங் ' கொடுத்துவிட்டு கலங்கும் மரக்கடத்தல் கும்பல்!
PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

“நிர்வாகிகள் நியமனத்துல பாரபட்சம்னு புகார் சொல்றாங்க பா...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“எந்த கட்சியிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருச்சி மண்டல போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்துக்கு, 17 நிர்வாகி களை சமீபத்துல நியமிச்சாங்க... இதுல, 20 வருஷத்துக்கும் மேலா தொழிற்சங்கத்தில் இருக்கிறவங்களை விட்டுட்டு, ஜூனியர்களுக்கு முக்கிய பதவிகள் குடுத்திருக்காங்க பா...
“இப்ப, மண்டல நிர்வாகியா அறிவிக்கப் பட்டுள்ளவர் மீது வன் கொடுமை வழக்கு இருக்கு... இன்னொரு நிர்வாகி, தி.மு.க., தொழிற்சங்கத்திலும் இருக்காராம் பா...
“சிலருக்கு மாவட்டம், மண்டலம்னு ரெட்டை பதவிகள் வழங்கியிருக்காங்க... 'திருச்சி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி, தன் சமுதாயம், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த நியமனத்துக்கு பரிந்துரை பண்ணிட்டார்'னு தலைமைக்கு பலரும் புகார் அனுப்பிட்டு இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“வெட்டியா அலைய வேண்டியிருக்கு ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துல மாதாந்திர பயணச்சீட்டு, மூத்த குடிமக்களுக்கான இலவச பயணச்சீட்டு, மாணவர்களுக்கான இலவச பாஸ் எல்லாம் தரா...
“பட்டாபிராம், திருநின்றவூர், மிட்னமல்லி சுற்றுப் பகுதிகள்ல மட்டும் 5,000 பேருக்கு மேல இந்த பயணச்சீட்டு, பாஸ்களை வாங்கறா ஓய்...
“பட்டாபிராம்ல பஸ் ஸ்டாண்ட் இருந்தும், 7 கி.மீ., தள்ளியிருக்கற ஆவடி பஸ் ஸ்டாண்ட்ல தான் இந்த பயணச் சீட்டு கள், பாஸ்களை வழங்கறா... இதனால, நேரம் விரயமாறதோட, 'சீனியர் சிட்டிசன்ஸ்' தள்ளாத வயசுல பஸ் ஏறி இறங்கி, ஆவடி போய் வர சிரமப்படறா... 'ஆவடியை சேர்ந்த அமைச்சர் நாசர், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி, பட்டாபிராம்லயே பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கணும்'னு அவாள்லாம் கேக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“மரம் வெட்ட முடியாம தவிக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“நீலகிரி மாவட்டம், கூடலுாரில் குறிப்பிட்ட சாலையோரங்கள்ல இருக்கும் விலை உயர்ந்த மரங்களை, ஒரு கும்பல், 'ஆபத்தான மரங்கள்'னு பெயின்ட்ல அடையாளப்படுத்தி, அதை வெட்டுறதுக்கு வருவாய் துறையிடம் அனுமதி கேட்டுச்சு... இதுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிச்சதால, அனுமதி வழங்க வருவாய் துறையினர் தயக்கம் காட்டுனாவ வே...
“இந்த சூழல்ல, வருவாய் துறை அதிகாரி ஒருத்தர் இடமாறுதல்ல போகும் தகவல் கிடைக்கவும், மரம் வெட்டும் கும்பல், அவரை, 'கவனிச்சு' மரங்களை வெட்ட அனுமதி வாங்கிட்டு... அவரும், 'கட்டிங்'கை வாங்கிட்டு இடத்தை காலி பண்ணிட்டாரு வே...
“மரங்களை வெட்ட கும்பல் தயாரானப்ப, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிச்சு, வருவாய் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிச்சுட்டாங்க... உடனே, அனுமதியை தற்காலிகமா நிறுத்தி வச்சு, அந்த மரங்களை மறுஆய்வு செய்ய உத்தரவு போட்டுட்டாவ...
“இதனால, 'கட்டிங்' குடுத்து மரம் வெட்ட அனுமதி வாங்கிய கும்பல் அதிர்ச்சியில இருக்கு வே...” என முடித்தார், அண்ணாச்சி.
“செந்தில்குமார், நாளைக்கு பார்க்கலாம்...” என, நண்பரிடம் குப்பண்ணா விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.