Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 12, 2025

Follow on Google

PUBLISHED ON : அக் 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 35 வயது பெண். படிப்பு: எம்.ஏ., தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் உள்ளேன். கணவர் வயது : 40. ரயில்வேயில் பணிபுரிகிறார். எங்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதனால், என் மீது வருத்தமும், சங்கடமும் கொண்டுள்ளார், கணவர்.

மருத்துவரிடம் சென்று, பரிசோதித்துக் கொள்ளலாம் என்று கூறினால், மாமியார் முட்டுக்கட்டை போடுகிறார். இத்தனைக்கும், என் கணவர் வீட்டினர் எங்களுக்கு துாரத்து சொந்தம் தான்.

ஒரு கட்டத்தில், தன் அக்கா மகளையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், கணவர். வீட்டில் என் மதிப்பு குறைந்தது. விவாகரத்து செய்து விடலாம் என்றால் சம்மதிக்க மாட்டேங்கிறார்.

மாதத்தில் பாதி நாள் அம்மா வீட்டில், மீதி நாட்கள் மாமியார் வீட்டிலும் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்நிலையில், என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னைவிட வயதில் சிறியவர். என் விஷயம் அனைத்தும் அவருக்கு தெரியும். என்னை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறார்.

'முறைப்படி விவாகரத்து பெற்று வா, நான் உன்னை கண் கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்...' என்கிறார். அவர் பெற்றோரிடமும் என்னைப் பற்றி கூறி, சம்மதம் வாங்கியுள்ளார். தன் அம்மாவிடம் என்னை அழைத்து சென்று, அறிமுகப்படுத்தியும் வைத்தார். அவரது சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம். அவருக்கு, ஒரே ஒரு தம்பி மட்டுமே. வெளியூரில் பணி புரிகிறான்.

நான், மீண்டும் என் கணவரிடம், 'விவாகரத்து செய்து விடலாம். நீங்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது போல், நானும் வாழ்வில், 'செட்டில்' ஆக விரும்புகிறேன்...' என்று கூறினேன்.

உடனே, ஆத்திரமடைந்து, 'உன்னை வெட்டி போட்டு விடுவேன்...' என்று கூறி, என் காதல் விஷயத்தை மோப்பம் பிடித்து, காதலரை மிரட்டி, ஆள் பலத்துடன் ஊரை விட்டே துரத்தி விட்டார்.

அவரை மறக்க முடியாமல் போன் செய்தேன். 'நான் இப்போது வேறு வேலையில் சேர்ந்துள்ளேன். சட்டபடி விவாகரத்து பெற்று வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக் கொள்வேன். அதுவரை என்னை தொடர்பு கொள்ளாதே...' என்று கூறிவிட்டார்.

நான் என்ன செய்யட்டும், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

கிறிஸ்துவ மதத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இஸ்லாமில், முதல் மனைவியின் வாழ்வாதாரம் பாதிக்காமல் அவளின் அனுமதியுடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம்.

ஹிந்து மதத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாம் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம்.

உன் கடிதத்தில், நீ எந்த மதத்தை சேர்ந்தவள் என்பதை குறிப்பிடவில்லை. மதத்தை புறம் தள்ளிவிட்டு பொதுவாக பேசுவோம்.

உன்னை காதலிப்பவர் ஏற்கனவே திருமணமானவரா, திருமணமாகி விவாகரத்து பெற்றவரா அல்லது விதவனா?

நீ, உன் காதலரை இரண்டாம் திருமணம் செய்து கொள்வது தனியே இருக்கட்டும். முதலில், நீ உன் முதல் திருமணத்திலிருந்து சட்டப்படி விடுதலையடைவதே அதிமுக்கியம். விவாகரத்துக்கு உன் கணவர் ஏன் சம்மதிக்க வேண்டும்? உன்னை ஒரு கூண்டில் போட்டு பூட்டி சாவியை பத்திரப்படுத்தி வைத்துள்ளாரா என்ன?

உன் கணவர், உன்னிடம் காட்டும் பூச்சாண்டி வேலைகளை பார்த்து பயப்படாதே. பெரும்பாலும் இவர்கள் காகிதப்புலிகள்.

அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

மகளிர் காவல் நிலையத்தில் உன் கணவரால் உன் உயிருக்கு ஆபத்து என, ஒரு புகார் கொடு. கூப்பிட்டு விசாரித்து உன் கணவரை அடக்கி வைப்பர்.

தொடர்ந்து குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி ஒருமனு தாக்கல் பண்ணு. உங்களிருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஒற்றைக் காரணம் போதும். மனுவில் உன் கணவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யக் கோரு. உனக்கான விவாகரத்து, ஆறு மாதத்திலிருந்து, 18 மாதங்களுக்குள் கிடைத்து விடும். உனக்கு மறுமணம் ஆகும் வரை, உனக்கு ஜீவனாம்சம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

விவாகரத்து கிடைத்தவுடன் உன் காதலனை உடனே மறுமணம் செய்து கொள்ளாதே. உன் காதலனின் பின்புலம் பற்றி முழுமையாக விசாரி. உன் கணவரின் மிரட்டலுக்கு பயந்து, உன் காதலர் ஏன் ஊரை விட்டு ஓடினார்? உன் காதலரின் பலவீனப்புள்ளி எது?

உன் காதலரைப் பற்றி விசாரிக்க, ஆறு மாத அவகாசம் எடுத்துக்கொள்.

உன் காதலர் உன்னை சீரியசாக காதலிக்கிறாரா? அவருடனான திருமணம் ஆயுட்காலம் தொடருமா, அல்லது ஆறே மாதத்தில் முறியுமா? குடிப்பழக்கம் உள்ளவரா? ஏராளமாய் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறாரா? அவரது குடும்பப் பின்னணி என்ன? அவரது அம்மா பற்றியும், தம்பி பற்றியும் அலசி ஆராய்.

எல்லா விஷயங்களும் திருப்தியாக இருந்தால், உன் காதலரை முறைப்படி திருமணம் செய்து கொள்.

எதையும் ஆற அமர யோசித்து நிதானமாக செய்.

புதிய திருமணத்தில், இரு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சிகரமான தாம்பத்யம் மேற்கொள்ள நெஞ்சார வாழ்த்துகிறேன்.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap