தார் பூசும் பணிகளில் குளறுபடி உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
தார் பூசும் பணிகளில் குளறுபடி உதவி பொறியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 20, 2026 11:02 PM
பெங்களூரு: சாலை தார் போடும் பணிகள் தரமாக நடத்தாத காரணத்தால், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய உதவி பொறியாளரை, சஸ்பெண்ட் செய்து, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா உத்தரவிட்டார்.
பெங்களூரின், வார்டு எண் 110ன் சம்பங்கிராம நகரில், பிரதான சாலைகள் உட்பட, பல்வேறு சாலைகளில் சமீபத்தில் தார் போடும் பணிகள் நடந்தன.
சாலை பணிகளை நகர வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்த போது, தரமற்ற முறையில் நடந்திருப்பது தெரிந்தது. அரசின் விதிமுறைகளை பின்பற்றவில்லை. நிர்ணயித்த அளவில் தார் பயன்படுத்தவில்லை. குறைந்த அளவில் தார் பயன்படுத்தியுள்ளனர்.
பணிகளை பார்வையிட்டு, தரமாக நடக்கும்படி பார்த்து கொள்வது, ஜி.பி.ஏ., உதவி பொறியாளரின் பொறுப்பு. ஆனால் அவர் இதை செய்ய தவறியுள்ளார். ஒப்பந்ததாரரின் சட்டவிரோத செயலுக்கு, ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதன்படி சம்பங்கிராமநகர் வார்டில் பணியாற்றும் உதவி பொறியாளர் பூஜாரப்பாவை சஸ்பெண்ட் செய்து, அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
