ADDED : ஜூலை 02, 2025 11:10 PM

சாம்ராஜ்நகர்: கந்தேகாலா கிராமத்தின் அருகில், 20க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்தன. இவை விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், கந்தேகாலா கிராமம் அருகில் உள்ள சாலையில், நேற்று காலை இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்தன. வாகனத்தில் சென்ற சிலர், அதை கண்டு சந்தேகம் அடைந்தனர்.
அவற்றை பிரித்து பார்த்தபோது, 20க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்தும், சில உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்தன.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறையினர், உயிருக்கு போராடிய குரங்குகளை உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். அவற்றுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொல்லை தருகின்றன என்பதால், விஷ உணவு கொடுத்து குரங்குகளை கொன்று, சாக்குப் பைகளில் கட்டி இங்கு போட்டிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, குண்டுலுபேட் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஏற்கனவே மலை மஹாதேஸ்வரா மலையில், நான்கு புலிகள் இறந்தன. இப்போது குரங்குகளும் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதால், விலங்குகள் ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துஉள்ளனர்.
இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.
