ADDED : மே 25, 2026 10:24 PM

-நமது நிருபர் -
சாம்ராஜ்நகர் மாவட்டம், சிவனசமுத்ரா அருவி அருகே மத்திய ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இது மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 1,600 ஆண்டுகள் பழமையான கோவில். பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரமாக ரங்கநாதர் காட்சியளிகிறார்.
ரங்கநாதர் சிலை மற்ற கோவில்களைப் போல முதிர்ந்த தோற்றத்தில் இல்லாமல், மிக அழகிய இளமைப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதனால் இவரை 'மோகன ரங்கா' என பக்தர்கள் அழைக்கின்றனர்.
காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மூன்று முக்கிய ரங்கநாதர் கோவில்களில் இது இரண்டாவதாகும். முதலாவது ஸ்ரீரங்கப்பட்டினம் ஆதிரங்கா, இரண்டாவது மத்திய ரங்கா, மூன்றாவது தமிழகம் திருச்சியில் உள்ள அந்தி ரங்கா. இந்த மூன்று கோவில்களையும் ஒரே நாளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனத்திற்குள் தரிசிப்பது அரிதான, மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. இதை செய்பவர்கள் மோட்சத்துக்கு செல்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மத்திய ரங்கா கோவில், ஹொய்சாளர், விஜயநகர மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் கொரோனாவிற்கு முன்பே புனரமைப்பு பணிகள் துவங்கின. கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிகள் நடந்தன. 2 கோடி ரூபாய் செலவானது. இப்பணிகள் முடிந்து கடந்த 22ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தற்போது, மத்திய ரங்கநாதர் கோவில் பழமை மாறாமல் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. சிவனசமுத்ரா அருவிக்கு செல்வோர் மத்திய ரங்கநாதரை தரிசிக்க தவற வேண்டாம். இவரிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும்.
