ADDED : மே 18, 2026 11:17 PM

- நமது நிருபர் -
பொதுவாக கோவில்களில் லட்சுமி தேவிக்கு முன் தாமரை மலர், சுத்தமான சங்கு, வெள்ளி நாணயம், நவதானியங்கள் வைத்து பூஜை செய்வதை பார்த்து இருப்போம். ஆனால், இறைச்சியை நைவேத்தியமாக படைத்து வழிபடும், சக்தி வாய்ந்த கோவிலாக மலலி லட்சுமி தேவி கோவில் உள்ளது.
ஹாசனின் ஹொளேநரசிபுரா மலலி கிராமத்தில் இந்த கோவில் அமைந்து உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலை விவசாயிகள் கட்டினர் என்று வரலாறு சொல்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் சந்தைக்கு சென்று விட்டு மாடுகளுடன் திரும்பி வரும் போது, ஒரு இடத்தில் களைப்பாற துாங்கி உள்ளனர். மாடுகளையும் மரத்தில் கட்டி உள்ளனர்.
விவசாயிகள் கண் விழித்து பார்த்த போது, மாடுகள் வயிறு வீங்கி அவற்றால் எழுந்து நிற்க முடியவில்லை. அப்போது அங்கு கொரவஞ்சி வேடத்தில் தோன்றிய பெண் ஒருவர், விவசாயிகளிடம், லட்சுமி தேவிக்கு கோவில் கட்டி வழிபடுவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்; மாடுகளின் வயிறு வீக்கம் குறைந்து விடும் என்று கூறி விட்டு மாயமாகி உள்ளார்.
கொரவஞ்சியின் சொல்படி விவசாயிகளும், லட்சுமி தேவிக்கு கோவில் கட்டி வழிபடுவதாக வேண்டி கொண்டதால், மாடுகளின் வயிறு வீக்கம் வற்றி போனது. தாங்கள் வேண்டி கொண்டபடி லட்சுமி தேவி சிலையை வைத்து, விவசாயிகள் சிறிய கோவில் கட்டியதாகவும், பிற்காலத்தில் ஊர் மக்கள் கோவிலை விரிவுபடுத்தியதாகவும் வரலாறு சொல்கிறது.
இந்த கோவிலுக்கு வந்து லட்சுமி தேவியை வேண்டி கொண்டு, தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலி கொடுத்து இறைச்சி உணவு சமைத்து, லட்சுமி தேவிக்கு நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை தினத்தன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் நடை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்து இருக்கும். மேலும் தகவலுக்கு 98801 61166 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எப்படி செல்வது?
l பெங்களூரில் இருந்து 172 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
l மெஜஸ்டிக்கில் இருந்து ஹொளேநரசிபுரா சென்று அங்கிருந்து 19 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, வாடகை காரில் செல்லலாம்.
l ரயிலில் சென்றால் ஹொளேநரசிபுராவில் இறங்கி கொள்ளலாம்.
l சொந்த வாகனத்தில் செல்வோர் வாகனங்களை கோவில் முன்பு நிறுத்தும் வசதி உள்ளது.





