ADDED : ஜன 19, 2024 01:03 AM

பெங்களூரு: இந்திய இயந்திர கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 'இம்டெக்ஸ் பார்மிங் 2024' என்ற சர்வதேச இயந்திர கருவி மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப கண்காட்சி, பெங்களூருவில் இன்று துவங்குகிறது.
இது, உலோக வடிவாக்கம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய ஆசியாவின் மிகப்பெரிய கண்காட்சி என கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில், இன்று துவங்கி, வரும் 23ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் அதிநவீன உலோக தொழில்நுட்பங்களும், சமீபத்திய உலோக வடிவாக்க தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மின்சார வாகனங்களின் பயன்பாடு, வளர்ந்து வரும் வெல்டிங் தொழில்நுட்பங்களின் தேவையை மேலும் விரிவுபடுத்தியுள்ளதால், உலோக வடிவாக்கம் முக்கியத்துவம் பெறுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது நாட்டின் உலோக உற்பத்தி சந்தை, கிட்டத்தட்ட 5,500 கோடி ரூபாயாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கடந்த 2022-23ம் நிதியாண்டில் உலோக வடிவாக்கத் துறையின் சந்தை, இரு மடங்கு விரிவடைந்துள்ளது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு துறையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம், கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

