ADDED : மார் 18, 2026 01:11 AM

இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக நேற்று ஏற்றத்தில் முடிந்தன. சென்செக்ஸ் 567 புள்ளிகள் உயர்ந்து, 76,070 புள்ளிகளிலும்; நிப்டி 172 புள்ளிகள் அதிகரித்து , 23,581 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
குறிப்பிட்ட சில துறைகளில் காணப்பட்ட வலுவான போக்கு, சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், சந்தை முதலீட்டாளர்களின் செயல்பாடுகளில் இன்னும் ஒருவித எச்சரிக்கை உணர்வு காணப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, சந்தையின் ஏற்ற இறக்கத்தை குறிக்கும் 'இந்தியா வி.ஐ.எக்ஸ்., குறியீடு' , 8 சதவீதம் குறைந்து, 20க்கும் குறைவான நிலைக்கு வந்துள்ளது சந்தைக்கு சாதகமான விஷயம் என, 'லைவ்லாங் வெல்த்' நிறுவனத்தின் நிறுவனர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கிய நிலையில், 'ஏ.சி.,' தயாரிப்பு துறையை சேர்ந்த 'வோல்டாஸ், ப்ளூஸ்டார், பி.ஜி., எலக்ட்ரோபிளாஸ்ட்' உள்ளிட்ட நிறுவன பங்குகள், நேற்று 2 சதவீதம் வரை உயர்ந்தன.
தொடர்ந்து நான்கு நாட்களாக இறங்குமுகத்தில் இருந்த பாதுகாப்பு துறை பங்குகள், நேற்று 8 சதவீதம் வரை உயர்ந்தன.
'நிப்டி இந்தியா டிபென்ஸ்' குறியீடு 1.86 சதவீதம் உயர்ந்தது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள வான்வழி தாக்குதல்கள் மற்றும் எல்லை பதற்றங்கள், இந்த துறை மீதான கவனத்தை அதிகரித்து உள்ளன. அதேநேரம், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித கொள்கை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த கவலை காரணமாக, 'நிப்டி ஐ.டி., குறியீடு' ஒரு சதவீதம் வரை சரிந்தது.
