பயங்கரவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி: ராஜ்நாத் சிங்
பயங்கரவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி: ராஜ்நாத் சிங்
ADDED : ஜூலை 16, 2024 12:37 PM

புதுடில்லி: 'நமது வீரர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் உறுதியுடன் உள்ளனர்' என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து விட்டது. தோடா மாவட்டத்தில், இன்று(ஜூலை 16) பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் நமது துணிச்சலான மற்றும் தைரியமான 5 பாதுகாப்பு படை வீரர்களை இழந்தது வருத்தம் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நமது வீரர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும் உறுதியுடன் உள்ளனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி
இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: பாகிஸ்தானால் நடத்தப்படும் பயங்கரவாதத்திற்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும். தற்போது காஷ்மீரில் அமைதி உருவாகி உள்ளது. அதை தக்க வைத்திருப்பது நமது பொறுப்பு. பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நாங்கள் நிச்சயம் விரைவில் பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.