ADDED : ஜூலை 12, 2024 07:01 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மத்திய தொழிலாளர் இணை அமைச்சர் ஷோபா கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, சந்திரசேகர் என்ற அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இந்த முறைகேட்டில் யூனியன் வங்கிக்கும் தொடர்பு உள்ளது. கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.
ஆனால், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளனர். சந்திரசேகரின் தற்கொலை, ஊழல் தொடர்பாக அவர் எதிர்கொண்ட கடுமையான அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
அவரது அகால மரணத்திற்கு வழிவகுத்த காரணிகள் குறித்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முறைகேட்டில் தொடர்புடைய யூனியன் வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் பங்கு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உதவ வேண்டும். சந்திரசேகர் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.