ADDED : ஆக 05, 2024 10:37 PM
ரோகினி:கடந்த மாதம் 14 பேர் இறந்த ஆஷா கிரண் காப்பகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக டில்லி சட்டப்பேரவை மனுக்கள் குழு கூறியது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., குல்தீப் குமார் தலைமையிலான குழு, சட்டசபையில் நேற்று ஆஷா கிரண் காப்பக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
பின்னர் செய்தியாளர்களிடம் குல்தீப் குமார் கூறியதாவது:
லஞ்சம் வாங்கியதற்காக 2016ம் ஆண்டு சி.பி.ஐ.,யால் ராகுல் அகர்வால் கைது செய்யப்பட்ட பின்னர், ஐந்து ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனாவின் வழிகாட்டுதலின் பேரில், தங்குமிடத்தின் நிர்வாகியாக ராகுல் அகர்வால் நியமிக்கப்பட்டார்.
சமூக நலத்துறைக்கு பொறுப்பான அமைச்சருக்குத் தெரியாமல், 2022 அக்டோபர் 4ல் காப்பக நிர்வாகி நியமிக்கப்பட்டார். தங்குமிடத்தின் நிர்வாகி நியமனம் தொடர்பாக கவர்னர் அலுவலகம் தவறான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
காப்பகத்தில் பெரிய அளவில் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. காலியிடங்கள் மற்றும் 14 பேர் மரணத்திற்கு வழிவகுத்த அலட்சியத்திற்காக எந்த அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை என்பதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு, துணை நிலை கவர்னருக்கு சட்டசபைக் குழு கடிதம் எழுதும்.
காப்பகத்தில் பணியாற்றும் 33 உதவி செவிலியர் உட்பட பலருக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பலரின் ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படவில்லை.
இந்த குழு, தங்குமிட அதிகாரிகளுடன் கூடுதல் கூட்டங்களை நடத்தி, அதன் அறிக்கையை சட்டசபை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, இடைக்கால அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். விசாரணையை முடிக்க அவர் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர். இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. அறிக்கைகள் கிடைத்த பின், அவற்றின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அலட்சியம் கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள்.
ஆதிஷி,
அமைச்சர்
தண்ணீர் பரிசோதனை செய்ய உத்தரவு அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்
இந்தியா கேட்:நகர
அரசாங்கத்தால் நடத்தப்படும் மனநலம் குன்றியவர்களுக்கான ஆஷா கிரண்
காப்பகத்தில் சமீபத்தில் 14 பேர் காசநோய் பாதிப்பால் இறந்தது குறித்து,
அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற
உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும்
அல்லது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கை உயர்
நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
'அரசு நடத்தும்
தங்குமிடம் இல்லத்தில் காசநோய் எவ்வாறு பரவுகிறது? அதிகம் பேர் இறப்புக்கு
ஒரே காரணம் இருக்க முடியாது' என கேள்வி எழுப்பிய தற்காலிக தலைமை நீதிபதி
மன்மோகன் தலைமையிலான அமர்வு, நீரின் தரம், கழிவுநீர்க் குழாய்களின் நிலையை
சோதிக்குமாறு டில்லி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிட்டது.
சமூக
நலத்துறை செயலரை நாளை (இன்று) காப்பகத்திற்குச் சென்று ஆய்வு செய்யவும்
குடிநீர் வாரியச் செயலர், சமூக நலத் துறை செயலர் இருவரும் தங்கள்
அறிக்கைகளை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.