கல்வித்துறை மாபியாக்களிடம் ஒப்படைப்பு: பிரியங்கா சாடல்
கல்வித்துறை மாபியாக்களிடம் ஒப்படைப்பு: பிரியங்கா சாடல்
ADDED : ஜூன் 23, 2024 03:48 PM

புதுடில்லி: பா.ஜ., ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் நுழைவுத் தேர்வு - வினாத்தாள் கசிவு, நீட் முதுகலை தேர்வு - ரத்து, யு.ஜி.சி. நெட் தேர்வு - ரத்து, சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு - ரத்து. இன்று நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான்.
வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து
பா.ஜ., ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களிடம் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதம் மற்றும் ஆணவத்தின் காரணமாக, வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, கல்லூரிகளில் துறைகள் காணாமல் போவது ஆகியவை நமது கல்விமுறையின் அடையாளமாக மாறியுள்ளன.
மிகப்பெரிய தடை
பா.ஜ., அரசால் ஒரு தேர்வை கூட நேர்மையான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ., அரசு மாறியுள்ளது. நாட்டின் திறமையான இளைஞர்கள் பா.ஜ.,வின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொன்னான நேரத்தையும், தங்கள் முழு ஆற்றலையும் வீணடிக்கிறார்கள். பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.