ADDED : ஜன 20, 2024 05:55 AM

ஷிவமொகா: “முதல்வர் சித்தராமையாவும், எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவும், மூன்று, நான்கு நாட்கள் மவுனமாக இருக்க வேண்டும்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷிவமொகாவில் நேற்று முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறியதாவது:
அயோத்தியில் ஜனவரி 22ல், ராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. எனவே முதல்வர் சித்தராமையாவும், எம்.பி., அனந்தகுமார் ஹெக்டேவும், இவர்களின் ஆதரவாளர்களும் அயோத்தி பற்றியோ, ராமர் கோவில் பற்றியோ எதையும் பேசாமல் இருப்பது நல்லது.
இவர்கள் இருவரும், பரஸ்பரம் குற்றஞ்சாட்டாமல், மூன்று, நான்கு நாட்கள் மவுனமாக இருந்தால் போதும். ராமன் குறித்து விமர்சிக்க வேண்டாம். முடிந்தால் ராம நாமத்தை கூறுங்கள். பாராட்டுங்கள்.
அனந்தகுமார் ஹெக்டே கடவுள் மீது பக்தி கொண்டவர், தேசப்பற்று கொண்டவர் என்பது, பா.ஜ.,வுக்கு தெரியும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், எந்த விதமான கருத்துகளையும் கூற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

