ADDED : மே 16, 2025 12:18 AM

லக்னோ: பீஹாரின் பெகுசுராய் பகுதியில் இருந்து டில்லிக்கு நேற்று அதிகாலை, 80 பயணியருடன் தனியார் பஸ் சென்றது. உ.பி.,யின் லக்னோ புறநகர் பகுதியான மோஹன்லால்கஞ்ச் பகுதியில் சென்றபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது.
பயணியர் அனைவரும் துாங்கிக்கொண்டிருந்ததால், அவர்களால் உடனடியாக பஸ்சில் இருந்து வெளியேற முடியவில்லை.
அவசரவழி கதவும் திறக்காததால் பின்னால் இருந்த பயணியர் தவித்தனர். இந்நிலையில், தீ மள மளவென பஸ் முழுதும் பரவியதில் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பயணியர் உயிரிழந்தனர்; மேலும் பலர் காயம் அடைந்தனர்.
அவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கியர் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியது தெரியவந்தது.