8,600 போதைப்பொருள் வழக்கு: கேரளாவில் இந்தாண்டில் பதிவு
8,600 போதைப்பொருள் வழக்கு: கேரளாவில் இந்தாண்டில் பதிவு
UPDATED : செப் 22, 2025 06:38 AM
ADDED : செப் 22, 2025 12:55 AM

கொச்சி: கேரளாவில், இந்தாண்டில் இதுவரை மட்டும் முன்னெப்போதும் இல்லாத வகையில், 8,622 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஜனநாயக இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, வரலாறு காணாத வகையில், இந்தாண்டு மட்டும் அதிகப்படியான போதைப்பொருள் வழக்குகள் பதிவானதாக கலால் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:
கேரளாவில் என்.டி.பி.எஸ்., எனப்படும் போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டத்தின்படி, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, 2023ல் கலால் துறை போதைப் பொருள் தொடர்பாக 8,104 வழக்குகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2024ல், இது, 8,160 ஆக உயர்ந்தது. இந்தாண்டில் இதுவரை மட்டும் 8,622 வழக்குகள் போதைப்பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
கடந்த காலங்களைவிட, இந்தாண்டு கைது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2023ல், 8,060 பேரும், 2024ல் 7,946 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்தாண்டு ஆக., வரை 8,505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.