கேரள வன அலுவலகங்களில் 'ரெய்டு' லட்சத்தில் லஞ்சம் பெற்றது அம்பலம்
கேரள வன அலுவலகங்களில் 'ரெய்டு' லட்சத்தில் லஞ்சம் பெற்றது அம்பலம்
ADDED : செப் 29, 2025 02:01 AM
மூணாறு:வனத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புதுறை நடத்திய சோதனையில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்ததாக, கேரள மாநில லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்தார்.
கேரளாவில், 71 வனச்சரக அலுவலகங்களில் நேற்று முன்தினம், 'ஆப்பரேஷன் வன பாதுகாப்பு' என்ற பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மனோஜ்ஆப்ரகாம் தெரிவித்தார்.
அதில், மிகவும் கூடுதலாக, இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனசரக அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் இடையே லட்சக்கணக்கில் பணம் பட்டுவாடா நடந்தது அம்பலமானது.
இம்மாவட்டத்தில், வல்லகடவு வனசரக அதிகாரியின் மொபைல் போனை ஆய்வு செய்த போது, ஒப்பந்ததாரர் ஒருவர் வனசரக அதிகாரிக்கு ஜூன் முதல் மூன்று மாதங்களில், 72.80 லட்சம் ரூபாய் கொடுத்ததும், அவர் கூறியபடி எடப்பள்ளி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனத்திற்கு, 1.36 லட்சம் ரூபாய் கொடுத்ததும் தெரியவந்தது.
தேக்கடி வனசரக அதிகாரியின் போனை ஆய்வு செய்தபோது, அதே ஒப்பந்ததாரர், பல வங்கி கணக்கில், 31.08 லட்சம் ரூபாயும், வேறு இரு ஒப்பந்ததாரர்கள் 1.95 லட்சம் ரூபாயும் கொடுத்தது தெரியவந்தது.
மறையூர் வனச்சரக அதிகாரியின் வங்கி கணக்கில் ஒப்பந்ததாரர் ஒருவர், 57,500 ரூபாயும், காந்தலுார் வனச்சரக அலுவலகத்தில் இரு அதிகாரிகளுக்கு ஒப்பந்ததாரர் வங்கிக்கணக்கில் இருந்து, 2,000 ரூபாய் வழங்கியதும் தெரியவந்தது. இச்சம்பவம் வனத்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

