140 கோடி மக்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை வழங்கும்; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
140 கோடி மக்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை வழங்கும்; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
UPDATED : செப் 21, 2025 09:55 PM
ADDED : செப் 21, 2025 09:53 PM

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு 140 கோடி மக்களின் வாழ்க்கைக்கு நிவாரணத்தை வழங்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மிகப்பெரிய சவால்களைக் கூட எதிர்கொள்ள முடியும் என்ற புதிய தன்னம்பிக்கை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இதுபோன்ற பல விஷயங்கள் நடந்துள்ளன. பாதுகாப்பில், நாம் நமது சொந்த உபகரணங்களை தயாரித்து ஏற்றுமதி செய்வோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உள்நாட்டு தயாரிப்பு
தொலைத்தொடர்பில், இன்று இந்தியா அதன் சொந்த உள்நாட்டு 4G தொலைத் தொடர்பை 5G ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கிறது. வந்தே பாரத் போன்ற அதிக வசதிகள் கொண்ட ரயில்கள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டன, இன்று அவை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. எனவே, உள்நாட்டு தயாரிப்புகளை ஏற்றுக் கொள்வது, சுயசார்புடையதாக மாறுவது, நமது திறமையையும் பயன்படுத்துவது உள்ளிட்டவை பிரதமரின் கனவாக இருக்கிறது.
செப்டம்பர் 22ம் தேதி திங்கட் கிழமை முதல் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின் பலன்களை நாம் பெறுவோம். ஏற்கனவே கார் நிறுவனங்கள் விலை குறைப்பு குறித்து செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியாகி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார்.
கடினமான சூழ்நிலை
ஜிஎஸ்டியில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை அவர் செயல்படுத்தியுள்ளார். 2014 க்கு முன்பு இருந்த பல்வேறு வகையான வரிகளைப் பார்த்தால், நாடு மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டது. பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அதிக செலவு ஆனது. ஜிஎஸ்டியே ஒரு பெரிய சீர்திருத்தமாகும். அந்த சீர்திருத்தம் மக்களுக்கு, குறிப்பாக தொழில்துறை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டு வந்தது. பல சுமைகள் குறைக்கப்பட்டன.
விலைகள் குறையும்
இன்று நாம் எடுத்த முடிவு நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள 140 கோடி குடிமக்களின் வாழ்க்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தைக் கொண்டுவரும். பிரதமர் கூறியது போல், சமையலறைப் பாத்திரங்கள், துணிகள், குழந்தைகளின் படிப்புப் பொருட்கள், டிவிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஸ்கூட்டர்கள் அல்லது கார்கள் என நமது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் 99% விலைகள் குறையும். இதனால் மக்களுக்கு பணம் சேமிப்பு கிடைக்கும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.