
கோபத்தை குறைத்த கீதை
நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் தந்தை பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். தாய் கிறிஸ்துவர். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சம்யுக்தா ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர். படங்களில் பிசியாக இருக்கிறார். இவர் 18 ஆண்டுகள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றினார்.
இவர் ஹிந்து, கிறிஸ்துவ மதக்கோட்பாடுகளை அறிந்தவர். சமீப ஆண்டுகளாக ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளது. பகவத் கீதையை படிக்க துவங்கி உள்ளார். சம்யுக்தாவுக்கு முன்கோபம் அதிகம். பகவத் கீதை படிக்க துவங்கிய பின், அவரது கோபம் குறைந்துள்ளது. வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தியதாம். கிரீம் படத்தில் நடித்த பின், சிவன் மீது பக்தி அதிகரித்துள்ளது.
திருமணம் எப்போது?
தன் தோற்றம் மற்றும் கிளாமர் நடிப்பால் இளசுகளின் துாக்கத்தை கெடுத்தவர் நடிகை சாருலதா. 1990ல், மோஸ்ட் வான்டட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார். அடிப்படையில் பஞ்சாபியாக இருந்தாலும், கன்னடத்தில் மிக அதிகமான படங்களில் நடித்தவர். சிறு வயதில் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆறு முதல் 10 படங்களில் நடித்த இவர், படிப்படியாக நடிப்பை குறைத்தார். சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் பிசியானார். தற்போது நடிப்பை நிறுத்திய சாருலதா, டில்லியில் தன் தாயுடன் வசிக்கிறார். ஆயத்த ஆடை தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவரது திருமணம் குறித்து, எந்த தகவலும் தெரியவில்லை.
வியட்நாமில் 'லொகேஷன்'
சீனிவாஸ் ராஜு இயக்கத்தில், கணேஷ் நாயகனாக நடிக்கும், கிருஷ்ணம் பிரணய சகி படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வியட்நாமில் இரண்டு பாடல்கள், சில காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் ஏற்கனவே வியட்நாமுக்கு சென்று, லொகேஷன் பார்க்கிறார்.
கணேஷ், மாளவிகா நாயர், சரண்யா ஷெட்டி உட்பட சிலர் மார்ச் முதல் வாரம் வியட்நாமுக்கு செல்கின்றனர்.
அங்கிருந்து திரும்பிய பின், மைசூரில் அடுத்தகட்ட படப்படிப்பு நடத்தப்படும். கணேஷ், சீனிவாஸ் ராஜு காம்பினேஷனில் தயாராகும் முதல் படம் இதுவாகும். அர்ஜன் ஜன்யா இசை அமைத்துள்ளார். சாது கோகிலா, கிரி சிவண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கொரில்லா யுத்தம்
கிருஷ்ணா பெயரை கேட்டாலே, லவ் மாக்டெய்ல் திரைப்படம் நினைவுக்கு வரும். படத்தின் இரண்டு பகுதிகளும், திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டாக ஓடின. தற்போது இவர் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பிரமாண்டமாக தயாராகும், ஹலகலி என்ற படத்தில் நடிக்கிறார். முதன் முறையாக புராண படம் ஒன்றில், நாயகனாக நடிக்கிறார்.
வரலாற்று பக்கத்தில் இடம் பிடித்த படை வீரனின் கதையாகும். கர்நாடகாவின் ஹலகலி என்ற ஊரின் வேடுவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராக முதன் முறையாக கொரில்லா யுத்தம் செய்தனர். இந்த யுத்தம் வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்தது. இதை ஹலகலி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காண்பிக்கின்றனர்.

