ADDED : ஜூன் 18, 2025 06:32 PM
புதுடில்லி:ஆம் ஆத்மி ஆட்சியில், அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில், 2,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பா, அமலாக்கத் துறையினர் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் பல இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
தலைநகர் டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில், 2,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரானா, நீல்காந்த் பக்ஷி ஆகியோர், ஊழல் தடுப்புப் பிரிவில், 2019ம் ஆண்டு புகார் மனு கொடுத்தனர்.
கிடப்பில் கிடந்த இந்த மனு குறித்து விசாரித்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த ஏப்ரல், 30ம் தேதி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஊழல் தடுப்புப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் குற்றவியல் வழக்கு ஒன்றை அமலாக்கத் துறை பதிவு செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 37 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
வகுப்பறைகள் கட்டும் ஒப்பந்தம், 34 பேருக்கு வழங்கப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆம் ஆத்மி கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியோ, 'அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை, ஆம் ஆத்மி தலைவர்களை முடக்க ஊழல் தடுப்புப் பிரிவை ஒரு கருவியாக பா.ஜ., பயன்படுத்துகிறது'என கூறியுள்ளது.
ஊழல் தடுப்புப் பிரிவு சமீபத்தில், சிசோடியா மற்றும் ஜெயின் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பியது. சத்யேந்தர் ஜெயின் ஆஜராகி ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதேநேரத்தில், மணீஷ் சிசோடியா விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை இந்த சோதனையை நடத்தியுள்ளது.