அம்பேத்கர் சிலையை அவமதித்தது காங். - எம்.எல்.ஏ. ஆதரவாளர்?
அம்பேத்கர் சிலையை அவமதித்தது காங். - எம்.எல்.ஏ. ஆதரவாளர்?
ADDED : ஜன 26, 2024 06:58 AM
கலபுரகி; அம்பேத்கர் சிலையை அவமதித்த வழக்கில் கைதானவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ. அல்லம்பிரபு பாட்டீலுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நபர் தனது ஆதரவாளர் இல்லை என்று, எம்.எல்.ஏ. மறுத்து உள்ளார்.
கலபுரகி ரூரல் கொத்தனுார் கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் சிலைக்கு மர்ம நபர்கள், செருப்பு மாலை அணிவித்து அவமதித்து இருந்தனர்.
இதனை கண்டித்து கலபுரகியில், தலித் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது, பா.ஜ., பிரமுகர் சந்திரகாந்த் பாட்டீல் பெட்ரோல் பங்க்கிற்கு தீ வைக்கப்பட்டது. சாலையில் டயர்களை போட்டு எரித்தனர்.
இந்நிலையில் சிலையை அவமதித்ததாக, கொத்தனுார் கிராமத்தின் கிரண், 26, ஹனுமந்தா, 25, மனு, 31, சங்கப்பா, 38 ஆகியோரை, கலபுரகி பல்கலைக்கழக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களில் சங்கப்பா, கலபுரகி தெற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., அல்லம்பிரபு பாட்டீலுடன் இருக்கும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவின.
சிலை அவமதிப்பு செய்ததில், எம்.எல்.ஏ.வுக்கும் தொடர்பு இருப்பதாக, சிலர் கருத்து பதிவிட்டனர். ஆனால் எம்.எல்.ஏ., மறுத்து உள்ளார். ''புத்தர், பசவண்ணர், அம்பேத்கரின், கொள்கைகளை பின்பற்றுவன் நான்.
அம்பேத்கர் சிலையை அவமதித்த சங்கப்பா, எனது ஆதரவாளர் இல்லை. எனது ஆதரவாளர்கள் இத்தகைய செயலை செய்தால், நான் பொறுத்து கொள்ள மாட்டேன்,'' என்றார்.

