கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்வதில் தவறில்லை சபாநாயகர் பேச்சால் சர்ச்சை
கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்வதில் தவறில்லை சபாநாயகர் பேச்சால் சர்ச்சை
ADDED : ஜன 07, 2024 02:00 AM
மங்களூரு:“கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்வதில், எந்த தவறும் இல்லை. இதுவும் கூட கல்வியின் ஒரு பகுதிதான்,” என, கர்நாடக சபாநாயகர் காதர் கருத்துத் தெரிவித்தார்.
சமீபத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில், பள்ளி ஒன்றில் மாணவர்களை, மலக்குழியை சுத்தம் செய்ய வைத்தனர். ஷிவமொகா வின், பத்ராவதியில் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ பரவியது. பெற்றோரும், பொதுமக்களும் பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்தனர்.
ஆனால், கர்நாடக சட்டசபை சபாநாயகர் காதர், “கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்வதில் தவறில்லை. இதுவும் கூட கல்வியின் ஒரு பகுதி,” என, கருத்துத் தெரிவித்துஉள்ளார். இது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
மங்களூரில் அவர் கூறியதாவது:
அவரவர் பள்ளிகளில், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வதில் தவறேதும் இல்லை.
தேவையான பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி, குப்பையை கூட்டுவது, கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் தவறில்லை. இதுவும் கூட கல்வியின் ஒரு பகுதிதான்.
சிறு வயதில் இருந்தே, இதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அரசு பள்ளிகளில், குப்பை கூட்ட, கழிப்பறை சுத்தம் செய்ய, தனி ஊழியர்கள் இருப்பதில்லை. அங்கு மாணவர்கள் இந்த பணிகளை செய்வது சகஜம். கையுறை, பிரஷ் பயன்படுத்தி கழிப்பறையை சுத்தம் செய்யலாம். சிறுவனாக இருந்தபோது, நானும் கூட இந்த பணிகளை செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

