தொடர் விடுமுறையால் ஊருக்கு புறப்பாடு போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் திணறல்
தொடர் விடுமுறையால் ஊருக்கு புறப்பாடு போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் திணறல்
ADDED : ஜன 26, 2024 11:59 PM
பெங்களூரு -பெங்களூரின், பிரதான சாலைகளில் நேற்று காலையில் இருந்தே, வாகன நெருக்கடி மிக அதிகமாக இருந்தது. வாகன ஓட்டிகள் திணறினர்.
குடியரசு தினம் வார இறுதியில் வந்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், பலரும் சுற்றுலாவுக்கும், சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக பெங்களூரில், நேற்று காலையில் இருந்தே வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
துமகூரு சாலை, மைசூரு சாலை, பல்லாரி சாலையில் மிக அதிகமான வாகன நெருக்கடி ஏற்பட்டதால், பாதசாரிகள், வாகன பயணியர் அவதிப்பட்டனர்.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததன. டி.தாசரஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ், பீன்யா, கோரகுண்டேபாளையா ஜங்ஷன் நெடுகிலும் வாகனங்கள் கி.மீ., தொலைவுக்கு நின்றிருந்தனர்.
பீன்யா - நாகசந்திரா இடையே, மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கவில்லை. இதனால் பலரும் சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்களை பயன்படுத்தினர். போக்குவரத்து நெருக்கடிக்கு, இதுவும் காரணம்.
லால்பாக் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு, பெருமளவில் மக்கள் வந்தனர்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால், பார்க்கிங் செய்ய இடம் இல்லாமல் திண்டாடிய காட்சி பல இடங்களில் தென்பட்டது.
ரிச்மண்ட் சதுக்கம், கார்ப்பரேஷன் சதுக்கம், ரெசிடென்சி சாலை, மெஜஸ்டிக், கே.ஆர்.சதுக்கம் மற்றும் சுற்றுப்புற சாலைகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதில், சிக்கி மக்கள் சோர்வடைந்தனர்.

