விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டவரை அடித்துக் கொன்ற சக கைதிகள்
விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டவரை அடித்துக் கொன்ற சக கைதிகள்
ADDED : ஜூன் 05, 2025 07:13 PM
புதுடில்லி:டில்லியில், கொலை முயற்சி வழக்கில் கைதாதி, விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டவரை, நீதிமன்ற, 'லாக் அப்'பில் இருந்த இரண்டு கைதிகள் சரமாரியாக தாக்கி, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியைச் சேர்ந்தவர், அமன், 24. சமீபத்தில், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைதான அமன், போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவரை விசாரணைக்கு ஆஜர் படுத்துவதற்காக சாகெட் நீதிமன்றத்துக்கு நேற்று போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது இதே வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற 'லாக் அப்'பில் காத்திருந்த ஜிதேந்தர், ஜெய்தேவ் என்ற இரண்டு கைதிகள், திடீரென அமனை சரமாரியாக தாக்கினர். அமனின் தலையை பிடித்து சுவற்றில் மோதினர். நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும், அதையும் மீறி இந்த தாக்குதல் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ரத்தம் சொட்டிய நிலையில் மயங்கி விழுந்த அமனை, போலீசார், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஜிதேந்தர், ஜெய்தேவ் ஆகியோருக்கும், அமனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், ஜிதேந்தர் மற்றும் ஜெய்தேவை, அமன், கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த பகை காரணமாகவே, அமனை, இருவரும் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணயை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வீரேந்திர கசானா என்ற வழக்கறிஞர் கூறுகையில், ''டில்லியில் உள்ள நீதிமன்றங்களில் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இதற்கு டில்லி போலீசார், பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதே காரணம். குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வரும்போது, போலீசார் கவனமாக இருந்திருக்க வேண்டும். இந்த தாக்குதல் நடந்தபோது, அதை தடுப்பதில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பு குறைபாடுக்கு காரணமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.