கவர்னருக்கு களங்கம் விளைவிக்ககூடாது : மம்தாவிற்கு ஐகோர்ட் கண்டிப்பு
கவர்னருக்கு களங்கம் விளைவிக்ககூடாது : மம்தாவிற்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : ஜூலை 16, 2024 10:30 PM

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி மீது கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மம்தாவிற்கு ஐகோர்ட் கண்டிப்பு காட்டியுள்ளது.
மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் மம்தா பேசும் போது, ‛‛சமீபத்திய நிகழ்வுகளால், கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர் '' எனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்காக மம்தா பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் ஆனந்த போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஜூலை 03 விசாரணைக்கு வந்த போது, கவர்னர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவில் தேவையான மாற்றங்களை சேர்த்து, புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.
இன்று நடந்த விசாரணையில் நீதிபதி கிருஷ்ணாராவ் கூறியது, பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது ஒருவரின் நற்பெயருக்கு அதுவும் கவுரமிக்க கவர்னருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான அறிக்கை வெளியிடுவது கட்டுபாடில்லாத உரிமை அல்ல.
அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட கவர்னர் மீது சமூக ஊடக தளத்தினை பயன்படுத்தி தனிப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவதூறு பேசுவதற்கு தடை விதிக்காவிட்டால், வழக்கு தொடர்ந்தவருக்கு எதிராக மீண்டும் அவதூறு வெளியிடுவதற்கு வழி வகுக்கும், இவ்வாறு நீதிபதி கூறினார்.