கவர்னர் மாளிகை முற்றுகை மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
கவர்னர் மாளிகை முற்றுகை மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
UPDATED : மே 27, 2025 12:07 PM
ADDED : மே 27, 2025 01:29 AM

இம்பால்: மணிப்பூரில், மாணவர்கள் தடையை மீறி நடத்திய பேரணியால் நேற்று பதற்றம் நிலவியதால், கவர்னர் அஜய் குமார் பல்லா, கவர்னர் மாளிகைக்கு ஹெலிகாப்டரில் செல்ல நேரிட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி - கூகி சமூகத்தினருக்கு இடையே, 2023ல் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில், மாநில கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் ஷிருய் லில்லி திருவிழா, உக்ருல் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடந்தது.
இதன் துவக்க நிகழ்வில் பங்கேற்க வந்த செய்தியாளர்களை ஏற்றி வந்த அரசு பஸ்களில், 'மணிப்பூர் போக்குவரத்து கழகம்' என எழுதப்பட்டிருந்ததை, காகிதத்தை ஒட்டி மறைத்திருந்தது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெய்டி இன மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மணிப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் கவர்னர் மாளிகை நோக்கி நேற்று பேரணி சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர்.
இதற்கிடையே, டில்லியில் இருந்து மணிப்பூருக்கு வந்த மாநில கவர்னர் அஜய் குமார் பல்லா, சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதால், விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் வாயிலாக அவர் சென்றார்.