ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி: தமிழகத்தில் 9 சதவீதம் அதிகரிப்பு
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி: தமிழகத்தில் 9 சதவீதம் அதிகரிப்பு
UPDATED : செப் 01, 2025 04:59 PM
ADDED : செப் 01, 2025 03:33 PM

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி ரூ.1.86 லட்சம் கோடி ரூபாய் வரிவசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசூல் ஆன தொகையை விட 6 சதவீதம் அதிகம் ஆகும்.
அதேநேரத்தில் தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு மாதம் 1ம் தேதியன்று முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரையில், ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்து இருந்தார். இதன்படி தற்போது நான்கு வரி அடுக்குகளாக உள்ள ஜிஎஸ்டி, இரண்டு வரிகளை கொண்ட அடுக்குகளாக மாற்றப்பட உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1.86 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 6 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி இருந்தது.
ஜிஎஸ்டி வருமானத்தில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட
மஹாராஷ்டிரா - ரூ. 28,900 கோடி (10 சதவீதம் அதிகம்)
கர்நாடகா -ரூ.14,204 கோடி ( 15.4 சதவீதம் அதிகம்)
தமிழகம் - ரூ.11,057 கோடி ( 9 சதவீதம் அதிகம்)
உ.பி., -ரூ. 9,086 கோடி (10 சதவீதம் அதிகம்) ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.
சிறிய மாநிலங்களை பொறுத்தவரை சிக்கிம் (39 சதவீதம்) நாகாலாந்து (33 சதவீதம்) மற்றும் மேகாலயா(35 சதவீதம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில்,
சண்டிகரில் 12 சதவீதம்
மணிப்பூரில் 24 சதவீதம்
ஜார்கண்டில் 1 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் சரிவை சந்தித்துள்ளது.