துணை ஜனாதிபதி இல்லத்தை காலி செய்தார் ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி இல்லத்தை காலி செய்தார் ஜக்தீப் தன்கர்
UPDATED : செப் 01, 2025 06:10 PM
ADDED : செப் 01, 2025 05:57 PM

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜக்தீப் தன்கர், 40 நாட்களுக்கு பிறகு அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவர் அபய் சவுதாலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடியேறினார்.
ராஜினாமா
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை 21 ல் தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இருப்பினும் மத்திய அரசுடன் மோதல் போக்கு காரணமாகவே ஜக்தீப் தன்கர் பதவி விலகினார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை ஒதுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜக்தீப் தன்கருக்கான பங்களாவையும் தயார் செய்துள்ளது. இருப்பினும், அந்த பங்களாவுக்கு செல்வது தொடர்பாக எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த வாரம் அவர், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். இதனை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
பதவி விலகிய பிறகு ஜக்தீப் தன்கர் வெளியில் வராமலேயே இருந்தார். அவர், துணை ஜனாதிபதிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வீட்டின் வளாகத்திலேயே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்ததுடன், அந்த வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து வந்தார். கடந்த 40 நாட்களாக அங்கேயே தங்கியிருந்தார்.
இன்று அவர், அங்கிருந்து ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று பல் டாக்டரை பார்த்து விட்டு திரும்பி உள்ளார்.
குடியேறினார்
இந்நிலையில், இன்று( செப்.,01) ஜக்தீப் தன்கர் அந்த இல்லத்தை காலி செய்தார். அவர் இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபய் சிங் சவுதாலாவுக்கு சொந்தமாக டில்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறினார். அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் பண்ணை வீட்டுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டன.
இது தொடர்பாக சவுதாலா கூறுகையில், எங்களுக்கு இடையே குடும்ப உறவு உள்ளது. அவர் என்னிடம் வீடு ஏதும் கேட்கவில்லை. நான் தான் அவருக்கு வழங்கினேன் என்றார்.
தேர்தல்
ஜக்தீப் தன்கர் பதவி விலகியதால் காலியாக உள்ள, துணை ஜனாதிபதி பதவிக்கு வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். இண்டி கூட்டணி சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.