நெல்லியாம்பதி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றிய சிறுத்தை பலி
நெல்லியாம்பதி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றிய சிறுத்தை பலி
ADDED : மே 27, 2025 09:50 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, நெல்லியாம்பதி வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றிய சிறுத்தை இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே, நெல்லியாம்பதி வனப்பகுதியில், தனியார் தேயிலைத் தோட்டத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் சுற்றிய சிறுத்தையை, தோட்ட தொழிலாளிகள் நேற்று முன்தினம் கண்டனர்.
தகவல் அறிந்து வந்த, கொல்லங்கோடு வனச்சரக அதிகாரி பிரமோத் தலைமையிலான வனத்துறையினர், சிறுத்தையை மீட்டு தேக்கடி பகுதியில் உள்ள வனஅலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, வனத்துறை கால்நடை மருத்துவர்களின் அறிவுரை படி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி சிறுத்தை இறந்தது. இதுகுறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
வனச்சரக அதிகாரி பிரமோத் கூறுகையில், 'இரு சிறுத்தைகள் இடையே ஏற்பட்ட மோதலில், 12 வயது மதிக்கத்தக்க சிறுத்தை படுகாயமடைந்திருக்கலாம். மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை அளித்தும், சிறுத்தையை காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின் சிறுத்தையின் உடலை அடக்கம் செய்யப்பட்டது,' என்றனர்.