முதல்வர் மேடை அருகில் வந்த நபர்: பாதுகாப்பு குறைபாடு காரணமா?
முதல்வர் மேடை அருகில் வந்த நபர்: பாதுகாப்பு குறைபாடு காரணமா?
ADDED : ஜன 26, 2024 11:50 PM

பெங்களூரு : குடியரசு தின கொண்டாட்டம் நடந்த, பெங்களூரு மானேக் ஷா மைதானத்தில், முதல்வர் அமர்ந்திருந்த மேடைக்கு அருகில் வந்த நபரால் பரபரப்பு உண்டானது. பாதுகாப்பு குறைபாடு காரணமா என்று, கேள்வி எழுந்து உள்ளது.
பெங்களூரு மானேக் ஷா மைதானத்தில், குடியரசு தினத்தை ஒட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சாகசங்கள் நடந்து கொண்டு இருந்தன. விழா மேடையில் அமர்ந்து முதல்வர் சித்தராமையா பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் இருந்து, ஒரு நபர் திடீரென தடுப்பு கம்பியை தாண்டி, முதல்வர் அமர்ந்திருந்த மேடைக்கு அருகில் ஓடினார்.
அவர் மேடைக்கு அருகில் சென்ற போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் கையில் ஒரு கடிதமும் இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் மைசூரின் பரசுராம், 55, என்பது தெரிந்தது.
இவரது மருமகன் அரசு தேர்வு எழுதி உள்ளார். அதற்கான முடிவுகளை கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடகா பொது சேவை ஆணையம் வெளியிடவில்லை. இதனால் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வலியுறுத்தி, முதல்வர் சித்தராமையாவிடம் கடிதம் கொடுப்பதற்காக, மைதானத்திற்குள் அத்துமீறி குதித்தது தெரியவந்தது.
பரசுராமிடம், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக, பரசுராம் மைதானத்திற்குள் அத்துமீறி குதித்தார் என்று, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஆனால் இதுகுறித்து போலீஸ் தரப்பில், எந்த விளக்கமும் இல்லை.

