சிறுமியிடம் அத்துமீறிய நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சிறுமியிடம் அத்துமீறிய நபர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 07, 2025 02:19 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில், இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபரை அம்மாநில போலீசார் நேற்று என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
உத்தர பிரதேசத்தின் லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையோரம் கணவன் - மனைவி தங்கள் இரண்டரை வயது மகளுடன் வசித்து வந்தனர்.
இவர்கள், தங்கள் மகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆலம்பாக் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர். இதையடுத்து, அவர்கள் தங்கியிருந்த பகுதியில் பதிவான 'சிசிடிவி' காட்சிகளை சோதனை செய்து போலீசார் விசாரணை செய்தனர்.
இதில், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சம்பவ இடத்துக்கு வெள்ளை நிற 'ஸ்கூட்டர்' ஒன்றில் வந்த நபர், சிறுமியை கடத்திச் சென்று, மெட்ரோ ரயில் நிலைய லிப்ட் இருந்த பகுதிக்கு பின்னால் வைத்து பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்கூட்டர் எண்ணை வைத்து விசாரித்ததில், குற்றச்செயலில் ஈடுபட்டவர் அய்ஸ்பாக் பகுதியைச் சேர்ந்த தீபக் வர்மா, 26, என்பதும், அவர் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.
தீபக் மாயமானதை அடுத்து, அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
அவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
அய்ஸ்பாக் பகுதியில் தீபக்கின் நடமாட்டத்தை கண்டறிந்த போலீசார், உடனடியாக அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும், துப்பாக்கியால் தீபக் சுட்டார். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர்.
காலில் காயமடைந்த தீபக், அருகில் இருந்த லோக்பந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட இரண்டரை வயது சிறுமிக்கு கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.