முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
ADDED : மே 19, 2025 04:02 PM

புதுடில்லி: முல்லை பெரியாறு அணையில், தமிழக அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கேரளா, தமிழகம் இடையேயான முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மே 6ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள அரசின் குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், அணை பராமரிப்பு பணியை கண்காணிக்க மேற்பார்வை குழுவை அமைக்க உத்தரவிட்டு இருந்தது.
பராமரிப்புக் குழு அளித்த பரிந்துரைகளை 2 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்று கூறி அடுத்த கட்ட விசாரணை மே 19ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது. அதேநேரத்தில் தமிழக அரசு தரப்பில் மழைக்காலம் தொடங்கும் முன்பே முல்லை பெரியாறில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
மனுவில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக பணியாளர்கள் சென்று வர அனுமதிப்பது, படகுகள் செல்வது, மரங்களை வெட்ட அனுமதி, சாலை அமைக்க கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று( மே 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வல்லக்கடவு சாலையை கேரள அரசு செப்பனிட்டால் அதற்கான செலவை ஏற்க தயார் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரங்களை வெட்டுவது தொடர்பான தமிழக அரசின் மனுவை விரைந்து பரிசீலிக்க வேண்டும். பராமரிப்பு பணிக்கு பணியாளர்கள் செல்ல 2வது படகு ஒன்றை தமிழக அரசு பயன்படுத்த கேரள அரசு அனுமதிக்க வேண்டும்.
மராமரத்துப் பணிகளை மேற்கொள்ள வல்லக்கடவு-முல்லை பெரியாறு சாலையை கேரள அரசு ஏன் சீரமைக்கக்கூடாது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கால நிர்ணயம் செய்து 4 வாரங்களில் அளிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.சாலை செப்பனிடும் பணி நடக்கும் போது தமிழக அரசின் அதிகாரி ஒருவர் அங்கு இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.