வரிகளில் எந்த மாற்றமும் இல்லை 10 ஆண்டில் வருவாய் மூன்று மடங்கு உயர்வு
வரிகளில் எந்த மாற்றமும் இல்லை 10 ஆண்டில் வருவாய் மூன்று மடங்கு உயர்வு
ADDED : பிப் 02, 2024 12:52 AM
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளதால், வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இடைக்கால பட்ஜெட் என்பதால், வருமான வரி உட்பட நேரடி மற்றும் மறைமுக வரிகளில் எந்த மாற்றங்களும் செய்யவில்லை என, மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், நேரடி வரி வருவாய் மூன்று மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. அதுபோல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 2.4 மடங்காக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துவோரின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ற உறுதிமொழியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே, புதிய வரி விதிப்பு முறையின் கீழ், வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2013 -- 20-14 நிதியாண்டில் 2.2 லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரி உச்ச வரம்பு, தற்போது 7 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
சில்லரை வணிகங்களுக்கான உத்தேச வரி விதிப்பு வரம்பு 2 கோடி ரூபாயில் இருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, பெருநிறுவன வரி தற்போதுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், சில புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், வரி செலுத்துவோருக்கான சேவைகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியது. அடையாளம் அறியா மதிப்பீடு மற்றும் மேல்முறையீட்டை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது.
பல புதிய நடைமுறைகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமையாக்கி உள்ளன. கடந்த 2013- - 2014ல் 93 நாட்களாக இருந்த வருமான வரி கணக்கு சரிபார்ப்பு நடைமுறைக்கான கால அளவு, தற்போது வெறும் 10 நாட்களாக குறைந்துள்ளது.
இதனால், வரி நடைமுறைகளில், முந்தைய மரபுகளை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இறக்குமதி வரி உட்பட அனைத்து நேரடி மற்றும் மறைமுக வரிகளில் தற்போதுள்ள விகிதங்கள், அதன் அடுக்குகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
அதே நேரத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்பட சில சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

