பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்
UPDATED : மே 23, 2025 08:21 PM
ADDED : மே 23, 2025 08:10 PM

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் 30ம் தேதி உ.பி., மாநிலம் கான்பூர் செல்ல உள்ளார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷூபம் திவேதி குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 25 இந்தியர்கள் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் உ.பி., மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ஷூபம் திவேதி என்பவர் தான் முதலில் கொலை செய்யப்பட்டார். அவருக்கு கடந்த பிப். 12 ம் தேதி தான் திருமணம் நடந்தது. அவரது மனைவி மற்றும் இவரது சகோதரி கண் முன்னால், ஷூபம் திவேதியை தலையில் சுட்டு பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.
பயங்கரவாதிகளின் இந்த வெறிச் செயலுக்கு ' ஆபரேஷன் சிந்தூர் ' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 30ம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கான்பூர் செல்ல உள்ளார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் அவர், ஷூபம் திவேதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளது தெரியவந்துள்ளது. பஹல்காமில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை முதல்முறையாக பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.