ராமர் கோவில் சிலை செய்ய பாறை கொடுத்தவருக்கு அபராதம்?
ராமர் கோவில் சிலை செய்ய பாறை கொடுத்தவருக்கு அபராதம்?
ADDED : ஜன 27, 2024 11:17 PM
மைசூரு: அயோத்தி ராமர் கோவில் சிலை செய்ய, பாறை கொடுத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்டவர் மறுத்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலுக்கான ராமர் சிலையை வடிவமைத்தவர் அருண் யோகிராஜ். இவர் மைசூரை சேர்ந்தவர். சிலையை வடிவமைக்க, மைசூரு அருகே குஞ்சேகவுடனபுரா கிராமத்தில் வசிக்கும், சீனிவாஸ் என்பவர் நிலத்தில் இருந்து, பாறை எடுத்து வரப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாறை கொடுத்த சீனிவாசுக்கு, கர்நாடகா அரசின் கனிமவளத்துறை 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த ரசீது, சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானது. “இந்த அபராத தொகையை பா.ஜ., கட்சி செலுத்தும்,” என, மைசூரு பா.ஜ., - எம்.பி. பிரதாப் சிம்ஹா நேற்று கூறினார்.
ராமர் சிலை செய்ய, பாறை கொடுத்ததால், சீனிவாசுக்கு, அரசு அபராதம் விதிப்பதா என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இதை சீனிவாஸ் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ''எனது நிலத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பாறைகளை, சிலருக்கு விற்று இருந்தேன். நிலத்தை தோண்டுவதற்கு, கனிம வளத்துறையிடம் அனுமதி பெறவில்லை. இதனால் எனக்கு அபராதம் விதித்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதமே, எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்திவிட்டேன். ராமர் கோவிலுக்கு, ராமர் சிலையை செய்ய, அதன்பின்னர் தான் பாறை கொடுத்தேன். எனக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கும், ராமர் கோவில் சிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை பெரிதாக்க வேண்டியது இல்லை,'' என்றார்.

